TVK பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்.. DGP அலுவலகத்தில் புகாரளித்த விஜய்!
சென்னை: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தனது சமீபத்திய பேட்டியில் விஜய் ரசிகைகள், மற்றும் தவெக ஆதரவு பெண்கள் சிலரது பேச்சு குறித்து குறிப்பிட்டு பேசுகையில் மிகவும் காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி அதாவது அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காட்டமான கண்டன அறிக்கை வெளியிட்டது மட்டுமல்லாமல், DGP அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் அளித்த புகார் மனுவில், “பொருள்: தமிழக வெற்றிக் கழக பெண்களைத் தரம் தாழ்ந்து பேசிவரும் திரு.பொன்ராஜ் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை கோருதல் தொடர்பாக. அன்புடையீர்! வணக்கம். ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு. பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
புகார்:: தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு. பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டனம்: அதேபோல் ஏற்கனவே பொன்ராஜைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி" என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











