விஜய்யின் அரசியல் பிரவேசம்.. தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு.. எப்போ, எங்கே தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் ராஜாவாக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களம் காண்கிறது. அதற்கான திட்டமிடல்களையும், செயல்பாடுகளையும் இப்போதிருந்தே அக்கட்சியினர் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தவெகவின் முதல் மாநில மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் வெளியிட்டிருக்கிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய். அதுதான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே GOAT படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது.கட்சியின் கொடி, பாடல் ஜோராக அறிமுகப்படுத்தப்பட்டது.

விஜய்யின் அறிவிப்பு: அதேசமயம் கட்சியின் முதல் மாநில மாநாடு எப்போது, எங்கே நடக்கும் என்று அவரது ரசிகர்கள் (தொண்டர்கள்) காத்திருந்தனர். இந்நிலையில் அதுகுறித்து விஜய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.
மாநில மாநாடு: நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024). மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடங்கிய களப்பணிகள்: நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
விரைவில் சந்திப்போம்: வாகை சூடுவோம்: இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை பார்த்த தவெக கட்சியினர் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











