மார்க்கெட் மட்டும் வேண்டும்.. வாழ்த்து சொல்லமாட்டாரா - விஜய்யை விமர்சிக்கும் தெலுங்கு மீடியாக்கள்
ஹைதராபாத்: ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து சொல்லாததால் விஜய்யை தெலுங்கு மீடியாக்கள் விமர்சித்துள்ளன.
திரையுலகின் உச்ச விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சில நாள்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில், The Elephant Whisperers மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் நாமினேஷன் ஆகியிருந்தன.

ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், The Elephant Whisperers
இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை The Elephant Whisperers படமும், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலும் பெற்றன. ஆஸ்கர் விருதை அந்தப் பாடலை இசையமைத்த எம்.எம்.கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர். விருதை பெற்றுக்கொண்ட கீரவாணி மேடையில் வைத்து பாடல் பாடி படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்கர் விருது வென்றதற்கு குவிந்த வாழ்த்துகள்
ஒரிஜினல் பாடல் பிரிவில் முதல்முதலாக ஆஸ்கர் விருது வென்ற இந்திய பட பாடல் நாட்டு நாட்டு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விருது வென்ற கீரவாணிக்கும், சந்திரபோஸுக்கும் பிரதமர் மோடி தொடங்கி இந்தியாவின் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர். விருது வென்று நாடு திரும்பிய அவர்களுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்
தமிழ் திரையுலகிலிருந்து நடிகர்களான ரஜினி, சூர்யா உள்ளிட்டோரும் நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதல்முறையாக தென்னிந்திய படம் ஒன்று உச்ச விருதாக கருதப்படும் ஆஸ்கர் வென்றிருக்கும் சூழலில் விஜய் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது விவாதமாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்வியும் எழுப்பிவந்தனர்.

விஜய்யை விமர்சிக்கும் தெலுங்கு மீடியாக்கள்
இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலை இசையமைத்த கீரவாணிக்கும், எழுதிய சந்திரபோஸுக்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்காததால் அவரை தெலுங்கு மீடியாக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. தெலுங்கில் தனது மார்க்கெட்டை வளர்த்துக்கொள்வதற்காகத்தான் விஜய் பைலிங்குவல் படமாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் இருக்கும் மார்க்கெட் மட்டும் விஜய்க்கு வேண்டும் விருது வென்ற தெலுங்கு படத்துக்கு வாழ்த்து கூறாமல் ஏன் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், லியோ படத்தின் படப்பிடிப்பில் விஜய் பிஸியாக இருப்பதால்தான் அவரால் வாழ்த்து சொல்லியிருக்க முடியாது என விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











