குதிரை பேரமல்ல.. குதிரை வேக அரசு.. உதயநிதி ஸ்டாலின், பிரேமலதாவுக்கு விஜய் பதிலடி!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற விஜய்யின் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை திமுக கூட்டணி கட்சிகள் வழங்கின. அந்தக் கட்சிகளைத் தொடர்ந்து அதிமுகவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தலைமையில் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு விஜய் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் மெஜாரிட்டி இல்லாமல் திணறிக்கொண்டிருந்தது தவெக. அதனையடுத்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் எல்லாம் ஆதரவு கொடுத்தன. அதோடு மட்டுமின்றி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவை விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள்.

முதலமைச்சராக விஜய்: தேவையான மெஜாரிட்டி கிடைத்ததால் முதலமைச்சராக தனது பணிகளை தொடர்ந்துவருகிறார் அவர். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கை, டாஸ்மாக் கடைகள் மூடல், சட்டம் ஒழுங்கு குறித்து தீவிர ஆலோசனை என பிஸியாக தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி மு.க.ஸ்டாலின், வைகோ, உதயநிதி, சீமான் என மாற்று கட்சி தலைவர்களையும் சந்தித்து தான் ஒரு நாகரீக அரசியல்வாதி என்ற பிம்பம் வரும்படியும் பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: இதற்கிடையே ஆட்சியமைப்பதற்கு முன்பாக அமமுக எம்.எல்.ஏ காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் காமராஜோ பேரவையில் இன்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். அதுமட்டுமின்றி எப்போதுமே தான் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பேன் எனவும் சொல்லியிருந்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்களோ என்று தவெகவினர் அஞ்சினார்கள். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
பிரேமலதா கொடுத்த அடி: அதேபோல் விஜய் தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசில் முக்கியமான பதவியை கொடுத்திருப்பதும் விமர்சனத்தை சந்தித்தது. அதுகுறித்து தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், "முகமூடியெல்லாம் இந்த அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் சொன்னார். எனவே அவரை முகம் மூடி சந்திக்க வந்த நபர் யார் என்று சொல்ல வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதேபோல் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவரில்லை என்றும் சொன்னார். அவர் இப்போது தனது ராஜகுரு ரத்தன் பண்டிட்டை அரசாங்க பதவியில் அமர வைத்திருக்கிறார். அவருக்கு பிடித்தது என்றால் அவரை பெர்சனலாக வைத்துக்கொள்ளட்டும். அரசாங்கத்துக்குள் கொண்டு வர கூடாது" என சாத்தினார்.
விஜய்யின் பதில்: அதேபோல் புஷ்பா பட பாணியில் ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலும் தாக்கியிருந்தார். இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளித்த முதலமைச்சர் விஜய், 'தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் பிரேமலதா சொன்ன இரண்டு விஷயங்களில் ஒன்று பற்றி நான் மீண்டும் யோசித்து பார்க்கிறேன். அதேபோல் குதிரை பேர அரசு என்று சொல்கிறார்கள். இது குதிரை பேர அரசு இல்லை; குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
