விஜய்யிடம் அதை எதிர்பார்க்கவும் மாட்டோம்; எதிர்பார்க்கவும் கூடாது - உண்மையை உடைத்த விஜய்யின் தாய்
சென்னை: வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய் நடந்துகொண்டது குறித்து அவரது தாய் ஷோபா சந்திரசேகர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் பெரும் வியாபாரம் நடக்கக்கூடிய ஹீரோக்களில் ஒருவர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதேசமயம் படம் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. இதனால் விஜய் தரப்பு பெரும் அப்செட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோர் அரவணைப்பில் விஜய்
விஜய் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால். நாளைய தீர்ப்பு மூலம் விஜய்யை அறிமுகப்படுத்திய அவர் தொடர்ந்து விஜய்யை வைத்து ரசிகன், மாண்புமிகு மாணவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதுமட்டுமின்றி விஜய்க்காக பிற இயக்குநர்களிடம் கதைகளை கேட்டவரும் எஸ்.ஏ.சந்திரசேகரே. இப்படி பெற்றோர் அரவணைப்பிலேயே ஆரம்பகட்டத்தில் வளர்ந்தவர் விஜய்.

பெற்றோருடன் விஜய்க்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு
சந்திரசேகர் - ஷோபா மற்றும் விஜய்க்கு இடையே சுமூகமாக போய்க்கொண்டிருந்த உறவு கடந்த சில வருடங்களாக சரியாக இல்லை என கூறப்படுகிறது. பெற்றோருக்கு எதிராக விஜய் நீதிமன்ற படிகள் ஏறியது அதனை உறுதிப்படுத்தியது. மேலும் பெற்றோரின் பிறந்தநாளுக்கோ, திருமண நாளுக்கோ அவர்களை விஜய் சந்திக்காதது விவாதமாகவும் மாறியது. இதற்கிடையே எல்லோர் வீட்டிலும் அப்பாவுக்கும், மகனுக்கு எப்படி சிறு சிறு பிரச்னைகள் வருமோ. அதேபோல்தான் எனக்கும் விஜய்க்கும் நடந்திருக்கிறது என சந்திரசேகரும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

வாரிசு ஆடியோ ரிலீஸில் விஜய்யின் செயல்
இப்படிப்பட்ட சூழலில் விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. அதில், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்துகொண்டனர். அரங்கத்துக்குள் வந்த விஜய் எல்லோரிடமும் சிரித்து பேச இவர்கள் இருவரிடம் மட்டும் பட்டும் படாமல் பேசியபடி நகர்ந்து சென்றார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. மேலும் தன்னை வளர்த்துவிட்டவர்களை விஜய் இப்படியா ஒதுக்குவது எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷோபா
இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நானும் எனது கணவரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஒரு விருந்தினராகத்தான் கலந்துகொண்டோம். அந்த விழாவில் ரசிகர்களை திருப்திப்படுத்துவது மட்டும்தான் விஜய்யின் நோக்கம். அது ரசிகர்களுக்கான விழா. விஜய்க்கு இவ்வளவு பெரிய விழா நடக்கிறது என்பது எங்களுக்கு சந்தோஷமே.

விஜய்யிடம் அதை எதிர்பார்க்கமாட்டோம்
அப்படிப்பட்ட விழாவில் நம்மை விஜய் கவனிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. பல பத்திரிகைகளில் இதுகுறித்து சர்ச்சையாக எழுதுகிறார்கள். ஆனால் விஜய்யும், நாங்களும் தினமும் சந்தித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். பின்பு ஏன் ரசிகர்களுக்கான விழாஇல் எங்களை அவர் தனியாக கவனிக்க வேண்டும்" என கூறினார்.


Click it and Unblock the Notifications











