நன்றி சொல்லிட்டு போறவன் இல்ல.. நன்றிக்கடனை தீர்த்துட்டு போறவன்.. யாரை சொல்கிறார் விஜய்?.. மீண்டும் பஞ்சாயத்து
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செலிபிரிட்டிகள், ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய விஜய், 'எனக்காக அனைத்தையும் விட்ட ரசிகர்களுக்காக சினிமாவை விடுகிறேன். நான் நன்றி சொல்லிவிட்டு போகிறவன் இல்லை; நன்றிக்கடனை செய்துவிட்டுதான் போவேன்' என கூறியிருந்தார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்த புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செலிபிரிட்டிகளும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், ரசிகைகளும் கலந்துகொண்டார்கள். மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கிறது.
எமோஷனலான விஜய்: இதுதான் விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழாவாக இருக்கும் என்று கருதப்படுவதால் அவரது ரசிகர்கள் ரொம்பவே எமோஷனலாக இருந்தார்கள். விஜய் உட்பட சில செலிபிரிட்டிகளும் அதே மனநிலைமையில்தான் இருந்தார்கள். விழாவில் பேசிய விஜய், "என்னுடன் முதல் நாளிலிருந்தே பயணிப்பவர்கள் எனது ரசிகர்கள். அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் எனக்காக நிற்கவில்லை. கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றிருக்கிறர்கள். அதனால்தான் நான் இப்போது இங்கு நிற்கிறேன். 33 ஆண்டுகளாக அவர்கள் எனக்காக நின்றார்கள். அடுத்த 33 வருடங்களுக்கு நான் அவர்களுக்காக நிற்கப்போகிறேன்.

நன்றிக்கடன் தீர்த்துவிட்டு போகிறவன்: எனக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டர்களில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி சொல்லிவிட்டு போகிறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டு போகிறவன்" என எமோஷனலாக பேசினார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரஜினியை கோர்த்துவிடும் ரசிகர்கள்: விஜய்யின் இந்தப் பேச்சு இன்னொருவகையிலும் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது ரசிகர்களுக்கு நன்றிக்கடன் செலுத்திவிட்டுத்தான் போவேன்; சும்மா நன்றி மட்டும் சொல்லிவிட்டு போகமாட்டேன் என்பதன் மூலம்; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லி சொல்லி அவரது ரசிகர்களை ஏமாற்றினார். அவருக்காக வாழ்நாளில் பல விஷயங்களை விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்கு நன்றிக்கடனாக எதையுமே செய்யவில்லை. ஆனால் இந்த விஜய் அப்படி இல்லை என்று மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை அட்டாக் செய்திருக்கிறார் என சோஷியல் மீடியாக்களில் கருத்துக்கள் பரவிவருகின்றன.
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு: முன்னதாக, 90களிலிருந்து அரசியலுக்கு வருவது குறித்து பேசிவந்தார் ரஜினி. ஒருவழியாக கடந்த 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களிலேயே தன்னுடைய உடல்நலத்தை காரணம் காட்டி அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











