ஜனவரி 9 ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?.. பாஜக, திமுகவை எதிர்த்ததால் வந்த வினை?.. தொடர்ந்து பிரச்னை
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியான சூழலில்; இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை சம்பாதித்திருக்கிறது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. நிச்சயம் படம் பந்தயம் அடிக்கும் என ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் உறுதியாக சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களில் ஒருதரப்பினரோ, இது பகவந்த் கேசரியின் ரீமேக் என்று உறுதியாகியிருப்பதால் நம்பிக்கையை கொஞ்சம் இழக்கவும் செய்திருக்கிறார்கள்.
எப்போது டிக்கெட் புக்கிங்: தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்னும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை. அதேசமயம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காலை ஆறு மணிக்கே முதல் காட்சியை திரையிட திட்டமிட்டிருப்பதாகவும்; அதனையொட்டி டிக்கெட் புக்கிங்குகளும் ஜோராக தொடங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. தமிழ்நாட்டில் கண்டிப்பாக காலை ஒன்பது மணிக்குத்தான் முதல் காட்சிக்கான அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது.

சென்சார் பிரச்னை?: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க படத்துக்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. காலையில் அந்தப் படத்துக்கு யு/ஏ சர்ட்டிஃபிக்கேட்டை கொடுத்துவிட்டார்கள் என்றும்; படத்தின் ரன்னிங் டைம் மூன்று மணி நேரம் மூன்று நிமிடங்கள் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் பட தயாரிப்பு தயாரிப்பிலிருந்து அதிகார்ப்பூர்வ தகவல் எதுவும் வராததால் ரசிகர்கள் உச்சக்கட்டமாக குழம்பிப்போயினர்.
வழக்கு தொடர்ந்த நிறுவனம்: இந்நிலையில் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அதில், "ஜனநாயகன் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனினும் இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக கடந்த மாதமே அனுப்பினோம். டிசம்பர் 19ஆம் தேதி படத்தை பார்த்த அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்து மறு தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது.
அவசர வழக்கு: ஆனாலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்போது இந்த வழக்கை இன்னும் சற்று நேரத்தில் அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் என்ன மாதிரியான தீர்ப்பு வரவிருக்கிறது என்பதை பார்க்க அனைவருமே ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்கிடையே அரசியல் கட்சி ஆரம்பித்து திமுக, பாஜகவை விஜய் எதிர்ப்பதால்தான் இந்த மாதிரியான சிக்கல்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாகவும் விஜய் ரசிகர்களிடம் கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











