எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து செயல்படுவதா? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திடீர் நீக்கம்!
சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து செயல்படுவதாகக் கூறி, விஜய் மக்கள் இயக்க அகில இந்திய செயலாளர் நீக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சியை பதிவு செய்தார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அந்த அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார்.

எஸ்.ஏ.சி விளக்கம்
அத்துடன் கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 'இது என் முயற்சி. இது நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அல்ல என்று எஸ்.ஏ.சி விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் மறுத்தார்.

அரசியல் கட்சி
தன் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் அரசியல் கட்சி முடிவிலிருந்து சந்திரசேகர் பின்வாங்கிக் கொண்டார். இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்திய, எஸ்.ஏ. சந்திரசேகர், மீண்டும், புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

புஸ்ஸி. என். ஆனந்த்
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து செயல்படுவதாகக் கூறி, விஜய் மக்கள் இயக்க அகில இந்திய செயலாளர் ரவிராஜா, துணைச் செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி.என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடிப்படை உறுப்பினர்
மக்கள் இயக்கத்தின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாலும் இயக்க கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்துவதாலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், தவறான செய்திகளை பரப்புவதாலும் ரவிராஜாவும் குமாரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தொடர்பு வேண்டாம்
விஜய மக்கள் இயக்க மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி கிளை நிர்வாகிகள் யாரும் இவர்களிடம் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











