சீனியர் இயக்குநரின் அழுகை முதல் டாப் நடிகர்கள் ஒதுக்கியதுவரை.. ஆட்டோகிராஃப் பற்றி விஜய் மில்டன் ஓபன்
சென்னை: சேரன் இயக்கத்தில் வெளியான க்ளாசிக் படமாக கொண்டாடப்படும் ஆட்டோகிராஃப் திரைப்படம் சில நாட்களில் ரீ ரிலீஸாகவிருக்கிறது. இதனால் மீண்டும் அந்தப் படம் பற்றி அனைவருமே பேச தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இப்படம் குறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேகே பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
சேரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆட்டோகிராஃப். இதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். கோபிகா, சினேகா, இளவரசு, பெஞ்சமின் என பலர் நடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வெளியான அப்படம் இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. காதலின் அத்தனை படிநிலைகளையும், பெண்ணுடனான ஒரு ஆணின் நட்பையும் ஓபனாக பேசிய படம் என்றால் அது ஆட்டோகிராஃப்தான்.
பிரேமமும் இப்படித்தான்: அப்படம் வெளியானதிலிருந்து அதன் தாக்கம் இல்லாமல் காதல் கதைகள் தமிழில் வருவது ஓய்ந்தபாடில்லை. தமிழில்தான் இப்படி என்றால் மலையாளத்தில் ஒருபடிக்கும் மேல். அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் முழுக்க முழுக்க இதன் தாக்கத்தில்தான் உருவானது. சொல்லப்போனால் அறிவிக்கப்படாத ஆட்டோகிராஃபின் ரீமேக் என்றுதான் சொல்ல வேண்டும். அதனை திரைத்துறையில் பலரும் சொல்வதுண்டு.

ரீ ரிலீஸ்: இப்படி பல நல்ல நினைவுகளை உருவாக்கி வைத்திருக்கும் ஆட்டோகிராஃப் படம் சில நாட்களில் ரீ ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. சமீபத்தில்தான் அதற்கான விழா நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். முதன்முறை ரிலீஸானபோது எப்படி வரவேற்பை பெற்றதோ அதேபோல் ரீ ரிலீஸிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மில்டன் பேட்டி: இந்நிலையில் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய், விக்ரம், சூர்யா, பிரபுதேவா என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம். ஆனால் அவர்கள் எல்லாம் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்கள். பிறகு சேரனே நடித்தார். இப்படத்துக்காக நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். இதன் ஷூட்டிங்கின்போது சேரனோடு நிறைய சண்டையும் போட்டிருக்கிறேன். இதில் ரவி வர்மாவுடன் நான் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் படத்தின் ஸ்கூல் போர்ஷன்களில் பணியாற்றியிருந்தார். நான் கேரளா போர்ஷன் செய்திருந்தேன்.
பாலுமகேந்திரா அழுகை: அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் எதையுமே சேரன் காம்ப்ரமைஸ் செய்துகொண்டதே இல்லை. படத்தின் அத்தனை பணிகளையும் முடித்துவிட்டு இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு படத்தை போட்டு காண்பித்தோம். படம் பார்த்தார். படம் முடிந்தவுடன் அவர் எழுந்திருக்கவே இல்லை. நாங்கள் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தோம். இன்னும் வரவே இல்லையே என நினைத்து அவருக்கு அருகில் சென்றோம். அப்போது அழுதுகொண்டிருந்தார். அது பெரிய விஷயமாக பார்க்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











