சென்னை கோட்டையை டார்கெட் செய்த விஜய்.. அம்பேத்கர் கல்லூரியில் ஆரம்பமான அரசியல் அலை.. தெறி டிரெண்டிங்!
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சர் நாற்காலியில் அமரவில்லை. கேப்டன் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வரை பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவரால் வீரியமான அரசியல் பயணத்தை தொடரமுடியவில்லை. அவரும் மறைந்து விட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலுக்குள் வரவில்லை. வெயில், மழை என பாராமல் அரசியல் பிரச்சாரங்களை செய்ய வேண்டும் என்பதால், அதை அவர் தவிர்த்து விட்டதாக கூறுகின்றனர்.

கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்து திமுகவுடன் கூட்டணி வைத்து எம்பி ஆகவே மாறிவிட்டார். இந்த தேர்தலில் அவரும் அவரது மநீம கட்சியும் போட்டியிடவில்லை. இந்நிலையில், கோலிவுட்டின் அனைத்து கண்களும் நடிகர் விஜய் அரசியலில் என்ன சாதிக்கப் போகிறார் என்பதை உற்றுநோக்க ஆரம்பித்துள்ளன.
அம்பேத்கர் கல்லூரியில் ஆரம்பம்: பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ள நிலையில், இன்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய். வியாசர்பாடி அருகே உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்த நிலையில், அங்கிருந்தே பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தெறிக்கும் டிரெண்டிங்: #TVKForTN #Thalapathy உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த சென்னையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இன்று விஜய்யின் ரோடு ஷோ நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டையை பிடிக்க: திமுகவின் வலுவான கோட்டையாக உள்ள சென்னை கோட்டையை பிடிக்க விஜய் திட்டமிட்டு ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களை சென்னையை சுற்றியுள்ள தொகுதிகளில் வேட்பாளர்களாக நிற்க வைத்துள்ள நிலையில், வரும் தேர்தலில் தவெக vs திமுக போட்டி அனல் பறக்கும் என தெரிகிறது. சென்னை கோட்டையை விஜய் கைப்பற்றினாலே மிகப்பெரிய வெற்றி தான் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எதிர்கட்சி தலைவர் தான் டார்கெட்?: ஒன்னு திமுக இன்னொன்னு தவெக என விஜய் தொடர்ந்து பேசி வரக் காரணமே திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்ப நினைத்தால் தவெகவை ஆதரித்து தன்னை முதல்வராக மாற்றுங்கள் அல்லது எதிர்கட்சி தலைவராகவாவது ஆகிவிட வேண்டும் என்பது தான் விஜய்யின் நோக்கம் என அரசியல் ஆலோசகர் கணித்து வருகின்றனர். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே திமுக vs தவெக போட்டி என தொடர்ந்து விஜய் கூறுகிறார் என்றும் கூறுகின்றனர். ஏப்ரல் 23 மக்கள் யாருக்கு ஓட்டுப் போட போகின்றனர். மே 4ம் தேதி ரிசல்ட் விஜய்க்கு வெற்றி வாகையை சூடுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











