அதிமுக ஆதரவு... ஜகா வாங்கும் எஸ்ஏசி, விஜய்!!

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்து, ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவரது மகனும் நடிகருமான விஜய்யும்தான்.
இந்த இருவரும் நேரடியாகவே திமுகவைத் தாக்கினர். சந்திரசேகரன் அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்துவந்தார்.
விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு பேசி வந்தார். ஆனால் இப்போதோ என்ன சொல்வதென்றே புரியாத குழப்பத்தில் தடுமாறிக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா தன்னிச்சையா 160 தொகுதிகளை மட்டுமல்ல, வேட்பாளர்களையும் சேர்த்தே அறிவித்ததில் எஸ்ஏசி ஏக அப்செட். இனி தங்களுக்கு அதிமுக கூட்டணியில் இடம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சிகள்தான் அதிமுகவின் பலமாக இருந்தது. இன்றைக்கு அந்தக் கூட்டணி கட்சிகளே பிய்த்துக் கொண்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டதால், தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள அதிமுகவுடன் எதற்கு சகவாசம், அமைதியாக இருங்கள் என்று பலரும் அட்வைஸ் பண்ணுகிறார்களாம் எஸ்ஏசிக்கு.
ஒருவேளை கூட்டணியில் சீட் கொடுத்தால், ஆதரவு அறிக்கை, பிரச்சாரம் என மகனை களமிறக்கும் திட்டத்திலிருந்த சந்திரசேகரன், இப்போது நிலைமை கைமீறிப் போயுள்ளதைப் பார்த்து, 'அவசரம் வேண்டாம். பொறுத்திருப்போம்' என்கிறாராம்.
'இதைத்தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்', என்று கூறிவிட்டு, ஷங்கரின் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டாராம் விஜய்!


Click it and Unblock the Notifications











