திரை தீப்பிடிப்பது கன்ஃபார்ம்.. அனிருத்தின் தரமான சம்பவம்.. இதுதான் விஜய்யின் பீஸ்ட் மோடு!
சென்னை: பீஸ்ட் டிரைலரிலேயே மூன்றாவது சிங்கிளின் காட்சிகள் மற்றும் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்த நிலையில், பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்துள்ள நிலையில், மூன்றாவது பாடலான பீஸ்ட் மோடு பாடல் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

பயங்கரமா இருக்கு
பீஸ்ட் படத்தின் டிரைலரிலேயே நடிகர் விஜய் யோகி பாபுவிடம் பயமா இருக்கா என கேட்டு விட்டு, இதுக்கு அப்புறம் ரொம்ப பயங்கரமா இருக்கும் என சொல்வது போல, பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிளான பீஸ்ட் மோடு பாடல் நிஜமாவே பயங்கரமாகத்தான் இருக்கு. ராக் ஸ்டார் அனிருத் விஜய் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுக்கும் விதமாகவே இப்படியொரு சம்பவத்தை தரமா செய்திருக்கிறார்.

அரபிக் குத்து
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ஒரு மாதத்தில் மின்னல் வேகத்தில் 278 மில்லியன் வியூஸ்களை யூடியூப் தளத்தில் அள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் வித்தியாசமாக உருவான இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்தனர். நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போட்ட நடனத்தை லிரிக் வீடியோவில் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் ஏகப்பட்ட நடன ரீல்களை போட்டு உலகளவில் டிரெண்ட் செய்து விட்டனர்.

ஜாலியோ ஜிம்கானா
பாடலாசிரியர் கு. கார்த்திக்கின் தத்துவ வரிகளில் நடிகர் விஜய்யின் ஜாலியான வாய்ஸில் வெளியான இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி 40 மில்லியனை கடந்து வைரலாகி வருகிறது. ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபியில் விஜய் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தனக்கே உரிய ஸ்டைலில் தாறுமாறாக ஆடி உள்ளார். பூஜா ஹெக்டே இரு பாடல்களில் அழகு மங்கையாக அசத்தி உள்ளார்.

திரை தீப்பிடிக்கும்
இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் 3வது சிங்கிளை வெளியிட்டுள்ளது. பிகில் படத்தில் வெறித்தனம், சிங்கப்பெண்ணே என பாடல்களை எழுதி அசத்திய பாடலாசிரியர் விவேக், பீஸ்ட் படத்தின் பீஸ்ட் மோடு பாடலான திரை தீப்பிடிக்கும் பாடலை எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்துள்ள தீவிரவாதிகளை துவம்சம் பண்ணும் போது பின்னணியில் ஒலிக்கும் மாஸான மான்டேஜ் பாடலாக இந்த பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் சாங்கா
"திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா படை நடுங்கும்.. அவன் மேல் இடிக்கும் கூட்டமெல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும்" என இந்த அளவுக்கு மாஸாக ஒரு பாடலை விவேக் எழுதி உள்ள நிலையில், இந்த பாடல் கிளைமேக்ஸில் வருமா? அல்லது இதுதான் ஓப்பனிங் பாடலா? என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். இரண்டு இடங்களிலும் மான்டேஜ் பாடலாக இந்த பாடல் வந்தால் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டிரைலர் காட்சிகளே
முழுக்க முழுக்க வேறு விதமாக ஒரு லிரிக் வீடியோவை ஷூட்டிங் ஸ்பாட் பிஹைண்ட் தி சீன்களுடன் உருவாக்கி இந்த பாடலை வெளியிட்டு இருக்கலாம் என்றும், டிரைலர் காட்சிகளையே எடிட்டர் வைத்து இருப்பதை பார்த்தால், அவசர கதியில் இந்த பாடலை ரிலீஸ் செய்ய உத்தரவு பிறப்பித்ததை போலவே உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், விஜய் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரைகளை தீப்பிடிக்க வைக்கப் போகிறார். ரசிகர்கள் யாரும் தியேட்டர்களை சேதப்படுத்தி விட்டு சிக்கலை சந்திக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications











