விஜய் முட்டி போட்டு பிரார்த்தனை.. தேர்தல் ஆதாயத்துக்கா? நெருங்கிப் பழகிய பிரபலம் பளிச்
சென்னை: திருச்சி: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்சியில் ஏப்ரல் 19ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது திருச்சியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டினார். இதனை பலரும் தேர்தல் ஆதாயத்திற்காக, அந்த தொகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் வாக்குகளைப் பெற இப்படிச் செய்துள்ளார் என்று பலரும், விமர்சித்து வந்த நிலையில், நடிகர் ஸ்ரீமன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக தனது தொகுதியில் இரண்டாவது முறையாக பிரசாரம் செய்ய திருச்சிக்கு மீண்டும் சென்றார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் எதிர் கொள்ளும் முதல் தேர்தல், அதுவும் பொதுத் தேர்தல் என்பதால் தேர்தலில் விஜய் எத்தனை தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்வார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் அனைத்து மாவட்டங்களுக்குமே கூட செல்லவில்லை. கடலூருக்கு பிரசாரம் செய்யச் செல்வதாக கூறிவிட்டு, அனுமதியும் வாங்கிவிட்டு, மூன்று முறை ரத்து செய்தது பெரும் பேசு பொருளாக மாறியது.

குற்றச்சாட்டு: தலைநகர் சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளுக்குமே கூட செல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்வது இல்லை என இப்படியாக பல விமர்சனங்கள் இருக்கும் போது, விஜய் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளான பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் இரண்டு முறை பிரசாரம் செய்துவிட்டார்.
பல தொகுதிகளில் விஜய் கட்சியின் வேட்பாளர்கள் விஜய் போன்ற உருவத் தோற்றம் கொண்ட மேடை நாடக கலைஞர்களை வைத்து பிரசாரம் செய்தனர். அதேபோல் சில வேட்பாளர்கள், விஜய்யின் உருவ பொம்மையை வைத்து பிரசாரம் செய்தனர். ஒரு வேட்பாளர் எல்லாம் 3டி விஷுவல் மூலம் பிரசாரம் செய்தார். தனது சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூட விஜய் பிரசாரம் செய்யாதது அரசியல் தளத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.
தேவாலயத்தில் விஜய்: விஜய் திருச்சியில் ஏப்ரல் 19ஆம் தேதி பிரசாரம் செய்ய வந்தார். அப்போது திருச்சியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் ஸ்ரீமன்: நடிகர் விஜய் திருச்சி களத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தது தொடர்பாக குணசித்திர நடிகர் ஸ்ரீமன் கூறுகையில், "விஜய் தனது அனைத்து படங்களின் முடிவின் போது பிரார்த்தனை செய்து வருபவர்தான். மற்றவர்கள் கோவிலுக்கு சென்று பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தாலும் இன்முகத்துடன் வாங்கிக் கொள்வார். எனக்கு விஜய் 30 ஆண்டுகளாக தெரியும், அவர் இதனை ஏதோ தேர்தல் ஆதாயத்துக்காக செய்யவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications