2ஜி ஊழல் பற்றி கத்தியில் ஆவேச வசனம்: முருகதாஸ், விஜய் மீது திமுக அதிருப்தி
சென்னை: திமுக முக்கிய நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குறித்து கத்தி திரைப்படத்தில் நெற்றிப்பொட்டில் அடிப்பது போல வசனம் உள்ளது திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீசாகுவற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் இருந்தே வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், படத்தின் வசனம் அவர்களை தூக்கிவாரிப் போட்டுள்ளது.

காற்றிலேயே ஊழல்
கத்தி திரைப்படத்தில், பத்திரிகையாளர் ஒருவர், விஜய் கதாப்பாத்திரத்தை நோக்கி, வெறும் தண்ணீதானே என்று ஒரு கேள்வி கேட்பது போன்ற காட்சியுள்ளது. அதற்கு விஜய் கதாப்பாத்திரம் "2ஜி அப்படீங்கிறது என்னது? அது காற்று. கண்ணுக்குத் தெரியாத காற்றிலேயே ஊழல் செய்கிறார்கள். தண்ணீர் என்ன லேசுபட்டதா" என்று கேட்பதை போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. அதிலும், ரசிகர்களை நோக்கி பார்த்தபடி விஜய் பேசும் அந்த உணர்ச்சிமிகு வசனத்திற்கு, தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

திமுக அதிருப்தி
2ஜி வழக்கு கோர்ட்டில் நிலுவையிலுள்ள நிலையில், விஜய் பேசிய இந்த வசனத்தால் திமுக உயர்மட்டத்தில் அவர் மீதும், வசனத்தை உருவாக்கிய இயக்குநர் முருகதாஸ் மீதும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், நிலுவையிலுள்ள, 2ஜி குறித்து பேசிய அந்த திரைப்படம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. ஒரு தலைபட்சமாக ஆளும் கட்சிக்கு அஞ்சி படம் வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் இந்தப் படத்தை சிக்கல் இல்லாமல் ரிலீஸ் செய்ய ஆளும் தரப்பு உதவியதற்கும் இந்த வசனம் உதவியாக இருந்திருக்கும் போல!.

தர்மசங்கடத்தில் ஜெ.அன்பழகன்
இதனிடையே கத்தி படத்தை சுமூகமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபாவளிக்கு முந்தைய நாள் திமுக தென்சென்னை செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டிருந்த கருத்து பற்றி, இப்போது தலைமையிடம் ஒரு குரூப் கொளுத்திப் போடப்பட்டுள்ளது. படத்திற்குள் இப்படி ஒரு உள் குத்து இருக்கும் என தெரியாமல் சப்போர்ட் செய்துவிட்டோமே என்ற தர்ம சங்கடத்தில் அன்பழகன் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஏதோ மர்மம்
கத்தி திரைப்பட கதாப்பாத்திரங்கள், டிவிக்களில் செய்தி பார்ப்பது போல வரும் காட்சிகளில், ஜெயா டிவி, ஜெயா பிளஸ் நியூஸ் சேனல்கள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. சில நேரங்களில் தந்தி டிவி காட்டப்படுகிறது. பெரும்பாலான படங்களில், எதற்கு வம்பு என்று, ஒரே நியூஸ் சேனல்கள் காண்பிக்கப்படுவது தவிர்க்கப்படும். ஆனால் இதில் ஜெயா டிவிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் திமுக தரப்பில் சில யோசனைகளை செய்ய வைத்துள்ளது.

பக்கத்து மாநிலத்தில் லைகா பெயருடன்
வாக்குறுதி அளித்தபடி தமிழகத்து தியேட்டர்களில், டிஜிட்டல் பிரிண்ட்டுகளில் லைகா நிறுவனம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பெங்களூரில் லைகா லோகோவுடனேயே படம் வெளியானது. இந்த லோகோ சர்ச்சை எந்த அளவுக்கு கால விரயமானது என்பதற்கு இது ஒரு உதாரணம்.


Click it and Unblock the Notifications











