தனியா வந்து சண்டை போடுறீங்க.. கூட்டமாக வாங்க.. தேர்தலைக் குறிப்பிட்டு பேசிய SA சந்திரசேகர்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். தமிழ் சினிமாவில் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவரின் மகன் தற்போது தமிழ் சினிமா மற்றும் தமிழ்நாடு அரசியல் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொண்ட SA சந்திரசேகர் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலை மேற்கோள் காட்டி பேசினார்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்குமரன் தலைவராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் சில வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பொதுக்குழு கூட்டப்படவில்லை. இப்படி இருக்கையில் ஏப்ரல் 26ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. ஏற்கனவே தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தயாரிப்பாளர் சங்கத்திலேயே பல பிரிவுகள் இருந்தாலும், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் தான் ஆதி என்பதால் மூத்த தயாரிப்பாளர்கள் பலரும் இந்த சங்கத்தில் தான் உள்ளனர்.

இப்படி இருக்கையில், இந்த சங்கத்தின் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து, நடைபெற்ற பொதுக்குழுவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் அப்பா SA சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், " தாய் சங்கமான தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் மிகவும் வலுவாக மாற வேண்டும். அதை நான் பலரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொண்டு இருந்துள்ளேன்.
தனியாக வந்து கவுன்சிலில் சண்டை போடுகிறீர்கள், அது நடக்கவில்லை, இது நடக்கவில்லை என்று முறையிடுகிறீர்கள், ஆனால் பொதுக்குழுவிற்கு பெரிய அளவில் சங்கத்தினர் வரவில்லை. தற்போது மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள் தானே? மக்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு தேர்தலில் எவ்வளவு விழிப்புணர்வாக வாக்குச் செலுத்தி உள்ளார்கள். அதேபோல் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த வாக்குறுதியும் எழுத்து வடிவில் மட்டும் இல்லாமல், செயல் வடிவிலும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications