ஜனநாயகன் பிரச்னை தீர்ந்ததா?.. ராணுவ அதிகாரி கையில் முடிவு இருக்காம்.. என்னங்க இது புதுசா இருக்கு?
சென்னை: விஜய் - ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸாகவில்லை. இதனையடுத்து நீதிமன்றமும் கையை விரிக்க செய்வதறியாது திகைத்தது படக்குழு. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் பிரச்னை பற்றி புதிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என சொல்லி; சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அப்செட்டான படக்குழு உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை முதலில் விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
மீண்டும் தனி நீதிபதியிடம்: இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு சென்றபோது அங்கே சாதகமாக எதுவும் நடக்கவில்லை; மாறாக மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே செல்லுங்கள் என நீதிபதிகள் அனுப்பி வைத்தார்கள். மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, தணிக்கை வாரியம் பதிலளிக்க போதிய அவகாசம் வழங்கவில்லை; எனவே தனி நீதிபதி மறுபடியும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறியது நீதிமன்றம்.

படக்குழு எடுத்திருக்கும் முடிவு: சூழல் இப்படி இருக்க நீதிமன்றத்தை நம்பினால் இனிமேல் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாகவும்; மறு தணிக்கைக்கு படத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் வழக்கு விசாரணைக்கு வரும்போது இவ்வழக்கை கேவிஎன் நிறுவனம் கண்டிப்பாக வாபஸ் வாங்கிவிடும் என்று சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தகவல்: இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படக்குழு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டதாகவும்; விசாரணைக்கு வழக்கு வரும்போது அதிகாரப்பூர்வமாக இது குறித்து தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் வேலைகளிலும் படக்குழு இறங்கிவிட்டதாக தெரிகிறது.
ராணுவ அதிகாரி கையில்: முக்கியமாக மறு தணிக்கையின்போது முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் படத்தை பார்ப்பார் என்றும்; அவர் பார்த்துவிட்டு ராணுவ இலச்சினையை படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை என சொல்லும்பட்சத்தில் படத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது; மாறாக அவர் ஆட்சேபனை தெரிவித்தால் மீண்டும் சிக்கல் எழுந்துவிடும் எனவும் வலைப்பேச்சு டீம் சொல்லியிருக்கிறது. எப்படியோ ஜனநாயகனுக்கு எழுந்திருக்கும் பிரச்னை விரைவில் தீர்ந்தால் நிம்மதி என்ற மைண்ட் செட்டில் இருக்கும் தளபதி ரசிகர்கள் எப்போது இதற்கு முடிவு வருமோ என்று காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











