ஜனநாயகன் மறு தணிக்கைக்கு போனது ஓகே.. அங்கே என்ன நடந்துகொண்டு இருக்கு தெரியுமா?
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்காததால் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நீதிமன்றத்துக்கு சென்றது. ஆனால் அதிலும் சாதகமான விஷயம் எதுவும் நடக்காததால்; வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறு தணிக்கை நடந்ததா இல்லையா என்பது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவில்லை. இதனையடுத்து கேவிஎன் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. அங்கேயும் சுத்தலில் விடப்பட்டது படக்குழு. இதனால் அப்செட்டாகி வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்துவிட்டதாகவும்; மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பும் திட்டத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
ராணுவ அதிகாரி கையில்: அதுமட்டுமின்றி படத்தில் மதத்தை புண்படுத்தும் காட்சிகளும், ராணுவ சிம்பலை அவமதிக்கும் காட்சிகளும் இருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. எனவே மறு தணிக்கையின்போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை படம் பார்க்க வைத்து; அவரது கருத்தையும் பரிசீலித்து தணிக்கை குழுவினர் முடிவு எடுப்பார்கள் எனவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது. இப்படி கடந்த ஒரு மாதமாக ஜனநாயகன் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்காமல் சிந்துபாத் கதையாக நீண்டுகொண்டிருக்கிறது.

மறு தணிக்கைக்கு சென்ற படம்: இப்படி தொடர்ந்து பல விஷயங்கள் பேசப்பட்ட சூழலில்; வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பிவிட்டார்கள் என்றும்; இன்று அல்லது நாளைக்குள் படத்தை அதிகாரிகள் பார்த்துவிட்டு முடிவெடுப்பார்கள். அதன் காரணமாக பிப்ரவரி 20ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள் என விஜய்யின் ரசிகர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள்.
என்ன நடக்குது?: இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்று அல்லது நாளை சென்சார் குழுவினர் படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் பார்ப்பதற்கு இன்னமும் தயாராகவில்லை. அதேபோல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் இன்னும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை. இதன் காரணமாக அந்தத் தரப்பிலிருந்து வரவேண்டிய மின்னஞ்சல் இன்னும் வரவில்லையாம்.
எப்போது பார்க்கிறார்கள்?: இதனால் படக்குழு ரொம்பவே அப்செட்டாகிவிட்டதாம். அநேகமாக இன்னும் இரண்டு நாட்களில் படத்தை பார்த்துவிடுவார்கள் எனவும் அந்த வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. முதலில் சென்சார் குழு கையை விரித்தது; பிறகு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது; இப்போது மறு தணிக்கையிலும் இவ்வளவு தாமதம் ஆகிறதே உச்சக்கட்டமாக நொந்துவிட்டார்கள் தளபதியின் ரசிகர்கள். உண்மையில் பாவம்தான்.


Click it and Unblock the Notifications











