ஜனநாயகன் பட சென்சார் வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு.. இப்போதைக்கு படம் ரிலீஸ் இல்லை
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால் தணிக்கை குழு அதிகாரிகள் சான்றிதழை வழங்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன்; இனிமேல் அவர் நடிக்கும் படங்களுக்கு கண்டிப்பாக பிரச்னைகள் வரும் என்று பலரும் பேசப்பட்டது. ஆனால் அரசியல் பிரவேசத்துக்கு முன்பு அவர் நடித்த தலைவா, காவலன் படங்களுக்கு பிரச்னை வந்தபோது எப்படி அதை சமாளித்து கடந்து சென்றோமோ அப்படித்தான் இனியும் பிரச்னை வந்தால் சமாளிப்போம் என விஜய் ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் ஜனநாயகன் படத்துக்கு வந்திருக்கும் சிக்கல் பெரிய அளவில் இருக்கிறது.
என்ன பிரச்னை?: அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ்க்கு பிளான் செய்துவிட்டு படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியது தயாரிப்பு தரப்பு. கடந்த டிசம்பவர் மாதம் படத்தை பார்த்த அவர்கள் சில மாற்றங்களை சொல்லியிருக்கிறார்கள். படக்குழுவும் அதை செய்துவிட்டு மீண்டும் சென்சாருக்கு அனுப்பியது. ஆனால் இந்த முறையும் அவர்கள் சான்றிதழ் கொடுக்கவில்லை. படத்தில் மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக சொல்லி சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

நீதிமன்றத்துக்கு சென்ற படக்குழு: இதனால் அதிர்ச்சியடைந்த பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை முதலில் விசாரித்த தனி நீதிபதி ஆஷா படத்துக்கு சென்சார் சான்றிதழ் (யு/ஏ) வழங்க வேண்டும் என்றும்; மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். இதன் காரணமாக விஜய்யின் ரசிகர்களும், படக்குழுவும் மகிழ்ச்சியடைந்தது.
சுப்ரீம் கோர்ட் டூ ஹை கோர்ட்: ஆனால் உடனடியாக அந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது மத்திய தணிக்கை குழு. அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு; தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை; நீங்கள் உயர் நீதிமன்றத்திலேயே இதனை பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லி சுப்ரீம் கோர்ட் அதிரடி காண்பித்தது.
இன்று இறுதி தீர்ப்பு: அதனையடுத்து மீண்டும் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கே வந்தது. சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பானது 27ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வந்திருக்கிறது. நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பில், "வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத பிரச்னையை ஏற்படுத்தும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருக்கின்றன. ஜனநாயகன் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்கிறோம். தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறர்கள். இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











