விஜய்யின் ஜனநாயகன்.. இன்றும் அது நடக்கவில்லை.. ஏமாந்துட்டே இருக்கோமே.. எப்போது வரும் முடிவு?
சென்னை: விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த அந்தப் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பெட்டிக்குள் முடங்கியது. நீதிமன்றத்துக்கு எல்லாம் சென்று பார்த்தது பட தயாரிப்பு நிறுவனம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு மறு தணிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்பே அனுப்பியது. மறு தணிக்கை அதிகாரிகளோ படத்தை பார்க்காமல் இழுத்தடித்துவருகிறார்கள்.
அரசியல் பிரவேசம் செய்து தேர்தலை சந்தித்த விஜய் ஜனநாயகன் படத்தோடு விலகப்போகிறார் என்று அறிவிப்பு வந்தது. இதுதான் கடைசி படம் என சொல்லப்படுவதால் அவரது ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனவரியில் ரிலீஸாகவில்லை. நீதிமன்றத்துக்கு சென்று பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே மறு தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பி வைத்தது பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன்.

லீக்கான படம்: படத்தை அனுப்பி சில மாதங்கள் ஆகின்றன. ஆனால் படத்தை அவர்கள் பார்க்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. தியேட்டருக்கு வராத; சென்சார் சான்றிதழ் வாங்காத ஒரு படம் ரிலீஸானது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. லீக்கான காப்பியில் எடிட்டர் என்று வேறு குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இதனை எடிட்டர் தரப்புதான் வெளியிட்டிருக்க வேண்டும் என தகவல் பரவியது.
ஃப்ரீலான்ஸ் எடிட்டர்: ஆனால் அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என எடிட்டர்கள் சங்கம் உறுதியாக சொன்னது. அதேசமயம் இதை அரசியலுக்காக விஜய்யே ஏன் வெளியிட்டிருக்கக்கூடாது என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆகமொத்தம் இந்தப் படத்தை லீக் செய்தவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்வதில் ரொம்பவே ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இறுதியாக சென்னையிலிருந்து சில பணிகளுக்காக ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்; அப்போது ஃப்ரீலான்ஸ் எடிட்டர் மூலம் இது லீக்காகிவிட்டதாகவும் சொல்லி அந்த நபர் கைதும் செய்யப்பட்டார்.
எடிட்டர் மீது நடவடிக்கை: மேலும் எடிட்டர் பிரதீப்பையும் சஸ்பென்ட் செய்து எடிட்டர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்தது. அவர் லீக் செய்யவில்லை என்றாலும்; சங்கத்தின் அனுமதி இல்லாமல் வெளியிலிருந்து ஒருவரை உதவிக்கு வைத்துக்கொண்டதால் இந்த நடவடிக்கை என விளக்கியது. இது ஒருபக்கம் இருக்க; படம் லீக்கானதற்கு சென்சார் அதிகாரிகள்தான் காரணம் என்பது இன்னொரு தரப்பினரின் கருத்து. அவர்கள் மட்டும் சரியான நேரத்தில் பார்த்து சான்றிதழை கொடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்கிறார்கள். ஒரு வகையில் அதுவும் உண்மைதான்.
இன்றும் பார்க்கவில்லை: இவ்வளவு நடந்த பிறகாவது படத்தை பார்த்து சென்சார் சான்றிதழை அதிகாரிகள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றுகூட ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை குழு அதிகாரிகள் பார்ப்பார்கள். இரவுக்குள் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் இன்றும் படத்தை பார்க்கவில்லை. எப்போது பார்ப்பார்கள் என்பதும் உறுதியாக தெரியவில்லை என சொல்கிறது கேவிஎன் தரப்பு. ஆகமொத்தம் ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இப்போது தீரும் அப்போது தீரும் என எதிர்பார்த்து எல்லோரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications