உங்களுக்கு யாருமே உண்மையா இல்லை.. ஒழுங்கா அப்பாவ சேர்த்துக்கோங்க.. விஜய்க்கு அமீர் அட்வைஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரத் கட்சி போட்டியிடவிருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்ற சீனியர்களும் தவெக பக்கம் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் அமீர் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு சில அட்வைஸ்களை செய்திருக்கிறார்.
விஜய் திரைத்துறைக்குள் வருவதற்கு முழுக்க முழுக்க அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் காரணம். மகனின் கரியர் இப்படித்தான் இருக்க வேண்டும்; இப்படிப்பட்ட படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று விஜய்யை பார்த்து பார்த்து செதுக்கியவர். மகனுக்காக பல கதைகளை கேட்டவர்; மகனுக்காக பல இயக்குநரிடம் பேசி படம் இயக்க செய்தவர் என விஜய்க்காக எஸ்.ஏ.சி உழைத்த உழைப்பு கொஞ்சமல்ல என்பது திரைத்துறையினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்குமே தெரியும்.
வெடித்த பிரச்னை: ஆனால் விஜய் வளர வளர அவருக்கு ரசிகர் கூட்டமும் வளர்ந்தது. அவருடன் இருக்கும் கூட்டமும் வளர்ந்தது. ஒருகட்டத்தில் விஜய்யிடம் புதிதாக வந்த சிலர் தங்களை அவரிடம் நல்லவர்களாகவும், நெருக்கமானவர்களும் காட்டிக்கொள்வதற்காக பல வேலைகளை செய்தார்கள். அதேசமயம் மறுபக்கம் விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக இடைவேளையும் உருவானது. இது நாளடைவில் பிரச்னையாகவும் மாறியது.

எஸ்.ஏ.சி சொன்னது: பிரச்னை பெரிதாகி விஜய் நீதிமன்றம் வரைக்கும் எல்லாம் சென்றார். ஒருவழியாக இரண்டு பேருக்குமிடையே இருந்த பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர ஆரம்பித்தது. இதுகுறித்து சில பேட்டிகளில், 'உலகத்தில் எல்லா தகப்பன் - மகனுக்கும் இடையே பிரச்னை வரத்தான் செய்யும். அப்படித்தான் எங்களுக்குள்ளும் வந்தது' என்று சந்திரசேகர் கூறியிருந்தார். இரண்டு பேருக்குமிடையே இருந்த விரிசல் குறைந்ததற்கான அடையாளமாக தவெகவின் முதல் மாநாட்டில் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
தவெகவில்தான் இருக்கிறாரா?: அதற்கு பிறகு தவெகவின் சில மேடைகளில் மட்டுமே அவரை பார்க்க முடிந்தது. சமீபகாலமாக அதுவும் இல்லை. இதனால் மீண்டும் விஜய்க்கும், தந்தைக்கும் பிரச்னை வந்துவிட்டதோ என்று பலரும் பேசினார்கள். அதிலும், தந்தையையே அருகில் சேர்த்துக்கொள்ளாதவரா தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஆட்சியை தரப்போகிறார் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் பிரபல இயக்குநரான அமீர்; விஜய்க்கு தனது அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
விஜய்க்கு சொல்லப்பட்ட அட்வைஸ்: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய்க்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்தத் தகப்பனும் தன்னுடைய மகன் கெட்டுப்போக வேண்டும். நாசமாக போக வேண்டும் என்று நினைக்கமாட்டார். கல்லூரி படிப்பை முழுவதுமாக முடிக்காத விஜய்யை ஹீரோவாக மாற்றி; அவர் சினிமாவுக்குள் வந்தபோது இதெல்லாம் ஒரு முகமா என்று விமர்சித்ததை எல்லாம் பார்த்திருக்கிறோம். விஜய்யின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்; எப்படி வெற்றியடைய வேண்டும் என்று எல்லாவற்றையும் திட்டமிட்டு அவரை அரசியல் பாதை நோக்கி நகர்த்தியது அவருடைய தந்தைதான்.
யாரும் உண்மையாக இல்லை: விஜய் இன்று அவருடன் வைத்திருக்கக்கூடிய யாருமே அவருக்கு ஒருநாளும் உண்மையாக இருக்கமாட்டார்கள். இதுதான் கடந்த கால வரலாறு. இதைத்தான் அரசியல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால் அந்தக் கைகளை எல்லாம் தன்னிடமிருந்து விலக்கிவிட்டு தந்தையாரை அருகில் வைத்துக்கொண்டார் என்றால் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











