ஹீரோவாகிறாரா விஜய் மகன் சஞ்சய்... தேசிய விருது இயக்குநரின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?
சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக கலக்கி வரும் விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவரது மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் பற்றி படித்துவிட்டு தற்போது குறும்படம் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் சுதா கொங்கரா சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

லியோவில் பிஸியான விஜய்
வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். ஒரு படம் முடித்துவிட்டதும் வெளிநாடு சென்று ஓய்வெடுத்துவிட்டு வந்த பின்னரே அடுத்தப் படத்தின் ஷூட்டிங் செல்வது விஜய்யின் வழக்கம். ஆனால், லியோ படத்திற்காக விஜய் ரெஸ்ட்டே இல்லாமல் ஷூட்டிங் சென்றது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனிடையே விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

கதையுடன் சென்ற சுதா
விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு தற்போது சென்னையில் உள்ளார். டைரக்ஷனில் ரொம்பவே ஆர்வமாக இருக்கும் சஞ்சய், தற்போது குறும்படம் ஒன்றை இயக்க ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருகிறாராம். இதற்காக பல லொக்கேஷன்களை தேடிப்பிடித்து ஷூட் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் தான், இயக்குநர் சுதா கொங்கரா விஜய் மகன் சஞ்சய்க்காக ஒரு கதை தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் சஞ்சய் ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறாராம்.

சம்மதம் சொல்வாரா சஞ்சய்
சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சுதா கொங்கரா. இவர் எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் என்ற நாவலில் இருந்து இரண்டு கதைகளை வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதையில் விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாராம். இதுகுறித்து விஜய்யிடம் அவர் பேசியதாகவும், அதற்கு அவர் சஞ்சய் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். சஞ்சயிடம் இந்த கதை குறித்து நீங்களே கேட்டுப் பாருங்கள், அவர் சம்மதித்தால் படம் பண்ணுங்கள் என்று விஜய் கூறியதாக தெரிகிறது.

நம்பிக்கையோடு காத்திருக்கும் சுதா
விஜய்யின் இந்த பதிலை கேட்ட சுதா கொங்கரா, கண்டிப்பாக சஞ்சயிடம் பேசுகிறேன் என்றும், அவருக்காக காத்திருப்பேன் எனவும் கூறியுள்ளாராம். இதனால் தனது தந்தைக்கு போட்டியாக சஞ்சய்யும் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், சஞ்சய் உறுதியாக இயக்குநராக வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறாராம். முன்னதாக மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சய்க்கு ஒரு கதையுடன் காத்திருப்பதாக கூறியிருந்தார். அவருக்கும் விஜய் இதே பதில் தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











