'ஜோசப்' விஜய்யின் தெலுங்கு 'மெர்சல்' - அக்கடதேச 'அதிரிந்தி'க்கும் கருணை காட்டுங்கப்பா..!
Recommended Video

ஐதராபாத் : தமிழில் 'மெர்சல்' படம் ரிலீஸுக்கு முன்பு சிக்கல்களைச் சந்தித்தது போலவே தெலுங்கு மெர்சலான 'அதிரிந்தி' படமும் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.
தெலுங்கு மெர்சல் 'அதிரிந்தி' தற்போது சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்தப் படம் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தெலுங்கில் ரிலீசாக இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது 'மெர்சல்' திரைப்படம். ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது 'மெர்சல்'.

ரிலீஸ் பிரச்னை
தமிழில் தீபாவளி தினத்தன்று 'மெர்சல்' படம் வெளியானது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால், படம் தீபாவளியன்று வெளிவருமா வராதா என்ற பரபரப்பு இருந்தது. படம் வெளிவந்த பின்னரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

மெர்சல் வசன சர்ச்சை
இந்நிலையில், 'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பா.ஜ.க-வினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களும், கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி என பா.ஜ.க-வினருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை
தமிழில் இப்படம் வெளிவரும் அன்றே தெலுங்கிலும் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு சென்சார் வேலைகள் முடிவடையாததால் தீபாவளியன்று படம் தெலுங்கில் வெளியாகவில்லை. அதனால், அக்டோபர் 27-ம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. அதுவும் உறுதிப்படுத்தப்படாமலே இருந்தது.

சென்சார் சான்றிதழ் ஓகே
தற்போது தெலுங்கு 'மெர்சல்' படமான 'அதிரிந்தி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, நாளை மறுநாள் 27-ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் படம் வெளியாக உள்ளது. தமிழில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தெலுங்கிலும் அதே போலவே கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

அங்கும் பூதம் கிளம்புமா
தமிழில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வசனம் ஆகியவை தெலுங்கில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல் வரவில்லை. தமிழில் ஏற்பட்ட சர்ச்சையால் தெலுங்கில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணை காட்டுங்க
தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் படத்திற்கு விலையில்லா விளம்பரம் செய்து படத்தை பெரிய வெற்றிபெறச் செய்ததைப் போல, ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க-வினரும் கிளம்பினால் அங்கும் வசூலை அள்ளிவிடலாம் என எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











