விஜய்யின் 'வேட்டைக்காரன்' இயக்குனர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிரிழப்பு..திரையுலகம் அதிர்ச்சி
சென்னை: விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தை இயக்கிய பாபுசிவன் திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த சில மாதங்களாக, சினிமா துறையை சேர்ந்த பல திறமையாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
சில திரைபிரபலங்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

புளோரன்ட் பெரேரா
கடந்த இரு நாட்களுக்கு முன் நடிகர் புளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தார். இவர் புதிய கீதை படத்தில் அறிமுகமானவர். பிறகு, பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படம் மூலம் பிரபலமானார். தனுஷின் தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, ராமின் தரமணி, தர்மதுரை, எங்கிட்ட மோதாதே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

வேட்டைக்காரன்
இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள், இயக்குனர் பாபுசிவன் நேற்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.
இவர், விஜய், அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' படத்தை இயக்கிவர். விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த இந்த படம், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது.

உடல்நலக்குறைவு
தரணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், விஜய்யின் குருவி படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். பல படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலை இயக்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை
இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார். அவருக்கு கொரொனா பாதிப்பு இல்லை.

திரையுலகினர் இரங்கல்
அவருடைய கல்லீரல் மற்றும் சீறுநீரகம் செயலிழந்து விட்டதால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மறைந்த பாபு சிவனுக்கு, வயது 54. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் இறுதிச்சடங்கு தாம்பரத்தில் இன்று நடக்கிறது. பாபுசிவனின் மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











