Vijay: “இந்த பசங்கள வச்சிக்கிட்டுதான் விஜய் CM ஆக ஆசைப்படுறாரா..?” எதுக்கு இதெல்லாம்!!
சென்னை: விஜய்யின் லியோ ட்ரெய்லர் கடந்த வாரம் 5ம் தேதி வெளியானது.
சென்னை ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்காக லியோ ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

அப்போது ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் இருக்கைகள் உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் சர்ச்சையான நிலையில், விஜய்யின் முதலமைச்சர் ஆசை குறித்து சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.
விஜய் CM ஆக ஆசைப்படுறாரா..?
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது. அதனால் உடனடியாக லியோ செகண்ட் சிங்கிளை ரிலீஸ் செய்த படக்குழு, அதனைத் தொடர்ந்து ட்ரெய்லரையும் வெளியிட்டது. விஜய் - லோகேஷ் காம்போவில் உருவான இந்த ட்ரெய்லர் பட்டையை கிளப்பியது. வெளியான 24 மணி நேரத்தில் ஜெயிலர் ட்ரெய்லர் சாதனையை மொத்தமாக காலி செய்தது.
அதேநேரம் லியோ ட்ரெய்லர் இரண்டு விதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரத்தம் தெறிக்கும் வகையில் அதிகமான வன்முறை காட்சிகளும், விஜய் பேசிய கெட்ட வார்த்தையும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதுபற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்தபோதும், பலரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இன்னொரு சம்பவத்தை விஜய்யின் ரசிகர்கள் செய்தனர்.

சென்னையில் பிரபலமான ரோகிணி திரையரங்கில், லியோ ட்ரெய்லர் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா கலவரத்தில் தான் முடிந்தது. ட்ரெய்லரில் விஜய் செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் ரியலாகவே செய்துமுடித்தனர். இதனால் ரோகிணி தியேட்டர் போர்க்களம் போல மாறியதோடு, 400 இருக்கைகள் சேதமாகின.
ஒட்டுமொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோகிணி தியேட்டருக்கு சேதம் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் பற்றி ரோகிணி தியேட்டர் நிர்வாகம் போலீஸில் புகார் கொடுக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது. இதனை ப்ளூ சட்டை மாறன் உட்பட சினிமா விமர்சகர்கள் பலரும் கண்டித்திருந்தனர். முக்கியமாக விஜய் இந்தச் சம்பவத்துக்கு எதிராக குரல் எழுப்பாதது இன்னும் சர்ச்சையானது.
இந்நிலையில், இதுபற்றி சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலில் களமிறங்கும் முடிவுடன் இருப்பது தெரிகிறது. சமீபத்தில் கூட மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், நிதியுதவியும் வழங்கினார். இப்படியான சூழலில், விஜய் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதாக சொல்லப்பட்டது.
இதனை குறிப்பிட்டுள்ள சவுக்கு சங்கர், ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் நடந்துகொண்டவிதம் மிக மோசமான செயல் என்றுள்ளார். மேலும், "இந்த பசங்களை வச்சிக்கிட்டுதான் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்னு ஆசைப்படுகிறாரா" என கேள்விக் கேட்டுள்ளார். தியேட்டரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாத இதுபோன்ற ரசிகர்களை வைத்துக்கொண்டு விஜய் முதலமைச்சர் கனவு காண்பது வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











