விஜய் சேதுபதி, மாதவன் எதிரும் புதிருமாக செய்த சம்பவம்: விக்ரம் வேதா வெளியாகி 5 ஆண்டுகள்
சென்னை: விஜய் சேதுபதி, மாதவன் எதிரும் புதிருமாக களமிறங்கி ரசிகர்களை மெர்சலாக்கிய விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' மிகப் பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது.
தமிழில் சூப்பர் ஹிட்டடித்த 'விக்ரம் வேதா' தற்போது ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் கூட்டணியில் இந்தியிலும் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் எப்போதாவது சில அபூர்வங்கள் நிகழக் கூடும். அப்படி 5 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான 'விக்ரம் வேதா' யாருமே எதிர்பார்க்காத வகையில் கில்லி மாதிரி சொல்லி அடித்தது. விஜய் சேதுபதியும் மாதவனும் எதிரும் புதிருமாக தெறிக்கவிட்ட இத்திரைப்படத்தின் திரைக்கதை, குதிரை வேகத்தில் அசுர பாய்ச்சல் நிகழ்த்தியது.

தாதா – போலீஸ் - வேதாளம்
விக்ரம் வேதா படத்தின் கதையோ தமிழ் சினிமா அடிக்கடி பார்த்துப் பழகிய வழக்கமான ஒன்று தான். ஒரு நல்ல தாதா, அவனுக்கு எதிராக ரொம்ப நல்ல போலீஸ், இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் வேதாளத்தின் விரட்டல் தான் ஒன்லைன். ஆனால், இதனை திரையில் காட்டிய விதம் தான், ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.

சபாஷ் சரியான போட்டி
விஜய் சேதுபதி 16 கொலைகள் செய்த தாதாவாகவும், மாதவன் 18 என்கவுண்டர்கள் செய்த போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தனர். இருவருக்குமே கதைக்குத் தேவையான முக்கியத்துவத்துடன் செம்ம வெயிட்டான பாத்திரங்களாக அமைந்தது. கையில் வடையுடன் போலீஸ் அலுவலகம் சென்று சரண்டர் ஆகும் விஜய் சேதுபதியின் இன்ட்ரோ சீனுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழித்தது. அதேபோல் மாதவனும் கெத்தான போலீஸ் கெட்டப்பில் ரசிகர்களை மிரட்டினார்.

கதைக்குள் விடுகதை
விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், கதைக்குள் விடுகதை என வித்தியாசமாக எழுதப்பட்ட திரைக்கதை தான். ஒவ்வொரு முறையும் மாதவனிடம் சிக்கும் விஜய் சேதுபதி, ஏதாவது ஒரு கதை சொல்லி அதை விடுகதையாக மாற்றிவிட்டு தப்பிவிடுவார். உண்மையில் இந்த யுக்தி மாதவனோடு ரசிகர்களையும் எங்கும் நகரவிடாமல் கட்டிப் போட்டது.

பலே புஷ்கர் - காயத்ரி
முதல் இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில், புஷ்கர் - காயத்ரி மிகத் துணிச்சலாக மல்டி ஸ்டார் கதைப் பின்னணியில் 'விக்ரம் வேதா' படத்தை இயக்கியது பாராட்டுக்குரியது. திரைக்கதையை நுட்பமாக எழுதியதோடு அதனை திரையில் முழுமையாக்கிய விதமும் பலே பலே. அதேபோல், விஜய் சேதுபதியையும் மாதவனையும் சரியாக பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.

புதிய அடையாளங்கள்
விக்ரம் வேதா படத்தின் வெற்றி, இந்தப் படத்தில் பணியாற்றிய பலரையும் அடையாளப்படுத்தியது. பின்னணி இசையில் மாஸ் காட்டிய இசையமைப்பாளர் சாம். சி.எஸ், வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்த கதிர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











