எல்லாரும் ஒன்னுன்னு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா.. மிரட்டும் விடுதலை ட்ரெய்லர்.. எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.
சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் படம் இயக்கப் போகிறார் என்றதுமே அந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது.
ஆனால், அதற்கு பிறகு படத்தில் விஜய்சேதுபதி இணைந்த நிலையில், 2 பாகங்களாக படம் விரிவடைந்த நிலையில், முதல் பாகத்துக்கான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா புதன்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இளையராஜா இசை
வெற்றிமாறன் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வந்த நிலையில், விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் கதையின் வீரியத்தை ரசிகர்களுக்கு தனது இசை மூலமாகவே கடத்தியிருக்கிறார் இளையராஜா. தனுஷ் குரலில் ஏற்கனவே வெளியான "ஒன்னோட நடந்தா" பாடல் ஹிட் அடித்த நிலையில், மீதமுள்ள பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவின் பெருமை மிக்க படங்களாக மாறி ஏகப்பட்ட விருதுகளையும் தேசியளவில் குவித்துள்ளன. இந்நிலையில், அடுத்ததாக இன்னும் சில தேசிய விருதுகளை அள்ள விடுதலை படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் ட்ரெய்லரே மிரட்டலாக தற்போது வெளியாகி உள்ளது.

எடுபிடி போலீஸ்
விடுதலை படத்தில் சூரி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். ஜீப் ஓட்டுவது, பாத்ரூம் கழுவுவது என சாதாரண எடுபிடி போலீஸாக சூரி நடித்துள்ள நிலையில், பெருமாள் வாத்தியார் என்னும் ஒரு புரட்சிக் கூட்டத்தின் தலைவனை பிடிக்க நான் உதவி பண்றேன் என உயர் அதிகாரிகளிடம் சூரி சொல்லியும் அவரை மட்டம் தட்டி அமைதியாக இருக்கச் சொல்கின்றனர். ஆனால், பெருமாள் வாத்தியார் பிடிபடவே சூரி ஒரு முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே புரிகிறது. எடுபிடி போலீஸ் ஹீரோவாக மாறுவது தான் முதல் பாகமாக இருக்கும் என தெரிகிறது.

இயக்கத் தலைவன்
விசாரணை என்கிற பெயரில் பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே நடத்தி புரட்சித் தலைவனாக பெருமாள் வாத்தியார் எனும் பெயரில் விஜய்சேதுபதி வரும் காட்சிகள் அனைத்துமே மிரட்டுகின்றன.
யார் பிரிவினைவாதிகள்
உயர் அதிகாரியான கவுதம் மேனனிடம் பெருமாள் வாத்தியார் விஜய்சேதுபதி சிக்கிக் கொள்ளும் நிலையில், மனுஷன் பொறந்த உடனே நீங்க மேல, நீங்க கீழ என பிரிக்கும் நீங்க பிரிவினைவாதிகளா? அல்லது எல்லாரும் சமம் என சொல்லி போராடும் நாங்க பிரிவினைவாதிகளா? என போலீஸாரிடம் சிக்கிய பிறகு விஜய்சேதுபதி சொல்லும் கடைசி வசனங்கள் கணீரென ஒலிக்கின்றன.


Click it and Unblock the Notifications











