Vijay Sethupathi: புதிய உலகத்திற்கு அழைத்து செல்லும் சினிமா.. விஜய் சேதுபதி உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி துணை கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவானவர். பல வித்தியாசமான முயற்சிகளிலும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்.
தற்போது வில்லன் வேடங்களிலும் கலக்கலான பர்பார்மென்சை கொடுத்து வருகிறார். விஜய், ரஜினி, கமல், ஷாருக்கான் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது-

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி துணை கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஹீரோவாக உயர்த்திக் கொண்டவர். தன்னுடைய படங்களில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. ஒரு பக்கம் ஹீரோவாக கலக்கிவரும் விஜய் சேதுபதி வில்லனாகவும் மிரட்டி வருகிறார். விஜய், ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி: சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மிஷ்கின் இயக்கத்திலும் விஜய் சேதுபதி இணையவுள்ளார். இந்தக் கூட்டணி முன்னதாக பிசாசு 2 படத்திலும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் ஆன்ட்ரியா லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
கோவா திரைப்பட விழா: இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்துவரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் கோவா தலைநகர் பனாஜியில் இந்த விழா துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் என்ற பேசும்படத்தின் ப்ரமோ வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் அதிதி ராவ், அரவிந்த்சாமி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
காந்தி டாக்ஸ் படம்: பிளாக் காமெடியை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ள நிலையில், இதில் திரையிடப்பட்ட முதல் மவுனமொழிப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, சினிமா ஒரு அற்புதமான மொழி என்று தன்னுடைய சிலிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சினிமா பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்குள் அழைத்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அனுபவத்தை தரும் சினிமா: இதன்மூலம் ரசிகர்கள் புதிய அனுபவத்தை பெறுவதாகவும் கூறியுள்ளார். இத்தகைய அற்புதமான உணர்வை தரும் சினிமாவில் தானும் பங்களித்து வருவதை நினைத்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் நடிகன் என்ற முறையில் ஒவ்வொரு தருணங்களையும் ரசிப்பதாகவும் அவர் மேலும் தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார். சினிமா புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அதீதமான உணர்வுகளை வெளிப்படுத்தி மனிதர்கள், சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தான் சினிமாவின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பதாகவும் தான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











