Maharaja day 2 collection: பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் மகாராஜா.. இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் கொடுத்த விஜய்சேதுபதியை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி, சாரை சாரையாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்
ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்து விடுவார் விஜய்சேதுபதி. விக்ரம் படத்தில் இவர் நடித்த சந்தானம் என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்த போதும், அதன்பின் இவர், கதாநாயகனாக நடித்த எந்த படமும் இவருக்கு வெற்றியை பெற்றுத்தராததால், போராடி வந்த விஜய்சேதுபதி, மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார்.

மகாராஜா படத்தின் கதை: சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர்.
க்ரைம் திரில்லர்: ஆனால், விஜய்சேதுபதி, 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக சொல்லி, போலீசும் பணத்திற்கு ஆசை காட்ட, போலீசார் அந்தக் கேசை கையில் எடுக்கின்றனர். யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க வேண்டும் எனத் துடிக்கிறார் என்பதற்கான விடை தான் மகாராஜா திரைப்படத்தின் கதை. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.
இரண்டாம் நாள் வசூல்: தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் 4.50 கோடி ரூபாயை வசூலித்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று 7.25 கோடியை வசூலித்து உலக அளவில் படத்தின் மொத்த வசூல் 11.95 கோடியாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நாளை பக்ரீத் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல ஓபனிங்: தெலுங்கில் மகாராஜா இரவுக் காட்சிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பைப் பதிவு செய்து வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் ரூ. 4.65 கோடி வசூலித்தது. அதே போல, தனுஷின் கேப்டன் மில்லர், முதல் நாளில் ரூ. 8.80 கோடி வசூலித்த நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தமிழ் படமாக மகாராஜா திரைப்படம் உள்ளது.


Click it and Unblock the Notifications











