இன்னொரு 'மௌனராகம்' உருவாகுமா? - மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி
சென்னை : 'காற்று வெளியிடை' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும் மணிரத்னமும் முதல் முறையாக இணைகிறார்கள்.
'மௌனராகம்' படத்தில் நடிகர் கார்த்திக் நடித்ததைப் போல இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌனராகம் :
மணிரத்னத்தை வெற்றிகரமான காதல் பட இயக்குநர் என அறிமுகப்படுத்திய படம் 1986-ல் வெளிவந்த 'மௌனராகம்'. ஏழை நாயகன், வசதி படைத்த நாயகி, இருவருக்குமிடையே உண்டாகும் காதல், அதற்கு நேரும் எதிர்ப்புகள் அதை உடைத்து நாயகியைக் கரம்பிடிக்கும் நாயகன் என்கிற கதையில் பல திரைப்படங்கள் வெளிவந்த காலத்தில் இப்படியான எந்தச் சடங்குகளும் இல்லாமல் வந்த படம் 'மௌனராகம்'.

காதல் கதை :
சுதந்திரமாக வளர்க்கப்படும் பெண், சூழ்நிலையால் விருப்பமின்றி ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். அந்தக் காலத்திய பெண்களின் உள்மனஉணர்வுகளைப் படமாகக் காட்டி அதிர்வை ஏற்படுத்தியது இந்தப் படம். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட நாயகி அவரோடு மனதளவில் சேர்ந்து வாழமுடியாமல் பரிதவிப்பாள். நாயகனின் தொடுதலைக் கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போல இருக்கிறது எனச் சொல்லி அருவெறுப்படைகிற மனைவியாக ரேவதி.

மோகன் கதாபாத்திரம் :
காதலனைக் கரம்பிடிக்காமல் வேறொருவனை மனமுடித்த நாயகியின் எண்ணங்களைப் புரிந்துகொண்ட ஆயிரத்தில் ஒரு கணவனாக மோகன். முதலிரவு அன்றே விவாகரத்தைப் பரிசாகக் கேட்கும் மனைவியிடமும் பாங்குடன் நடந்து கொள்வார். பெண்ணின் அனுமதி இல்லாமல், மனைவியாகவே இருந்தாலும் அவளது நிழல் கூடப் படக்கூடாது என வாழ்வார் மோகன். கடைசியில், இருவருக்குமான இரண்டாவது காதல் அத்தியாயம் தொடங்குகிற அழகான கவிதைதான் 'மௌனராகம்'.

காதலின் புதுமை :
மணிரத்னம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருபவை அவரது காதல் படைப்புகள். அதற்கான தொடக்கப்புள்ளி இந்தக் கதைதான். காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகிவந்த மணிரத்னம் இப்போது வரைக்கும் அதைத் தொடர்ந்து வந்திருக்கிறார். 90-களில் பிறந்தவர்களுக்கும் மணிரத்னத்தின் காதல் படங்கள் பிடித்திருப்பதற்கான காரணம் அவரது கதைகளில் இருக்கும் காதலின் புதுமையும், எளிமையும்.

கார்த்திக் கேரக்டர் :
மோகன், ரேவதி இடையேயான கதையில் ஃப்ளாஸ்பேக் விரியும். நவரச நாயகன் கார்த்திக் கவுரவ வேடத்தில் வந்தார். காதலென்பதே எதிர்பாராமல் வருவதுதானே. கார்த்திக் மீது ரேவதிக்குக் காதல் வரும். திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் விதிவசத்தால் கார்த்திக் விபத்தில் இறந்துபோவார். கார்த்திக் ரேவதியுடனான காதல் காட்சிகளில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.

மிஸ்டர் சந்திரமௌலி :
இந்தப் படத்தில் கார்த்திக் கேரக்டர் பிரபலமானதைப் போலவே மற்றொன்றும் பிரபலம். அது கார்த்திக் பேசும் வசனமான 'மிஸ்டர் சந்திரமௌலி'. இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் பேசும் கார்த்திக்க்கின் வசனம் 'மிஸ்டர் சந்திரமௌலி' என்பதிலிருந்தே இந்த வசனத்தின் பிரபலத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். அதுபோல, விஜய் சேதுபதியும் படத்துக்குப் படம் பேசும் வசனங்கள் ட்ரெண்ட் ஆகின்றன. இந்தப் படத்திலும் அப்படி விஜய் சேதுபதி பேசும் வசனம் பிரபலமாகலாம்.

விஜய் சேதுபதி நடிப்பு :
யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வரும் விஜய் சேதுபதிக்கு நடிப்பில் ஸ்கோர் செய்ய இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு. கதாநாயகிகளின் கண்களையே கதாபாத்திரமாக்கும் மணிரத்னத்திடம் விஜய் சேதுபதியின் கண்கள் எப்படி விளையாடப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கார்த்திக் போல விஜய் சேதுபதி :
கதாநாயகிக்கு அதிக ஸ்கோப் இருக்கும் படங்களில் விஜய் சேதுபதி நடித்ததில்லை. கார்த்திக்கும் 'மௌனராகம்' வரை அப்படி நடித்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. விஜய் சேதுபதி லோக்கல் தாதாவாக நடிக்க வாய்ப்பிருக்கிறது.

எதிரும் புதிரும் :
விஜய் சேதுபதி இதுவரை முரட்டுத்தனமான கேரக்டர்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவரது பாணி டயலாக்குகள் வேறு மாதிரி இருக்கும். ஆனால், மணிரத்னம் படத்தின் நாயகர்கள் வேறு மாதிரி. ஆண்மையில் பெண்மை கலந்திருக்கும். நிதானமாகப் பேசுவார்கள். ஆக, இதுவரை நடித்திராத மாதிரியாக, நிதானமாகக் கவிதை போல டயலாக் பேசும் விஜய் சேதுபதியைக் காணப் போகிறோம்.


Click it and Unblock the Notifications











