இவனுக்கெல்லாம் இனி பிளெக்ஸ் கட்டுனா யாரு படம் பார்க்க வருவான்னு சொன்னாங்க.. எமோஷனலான விஜய் சேதுபதி!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா ஐந்து நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டாவது வாரத்தில் அதிகபட்சம் 70 முதல் 80 கோடி ரூபாய் வசூலை இந்த படம் கடக்கும் என்றும் அரண்மனை 4 படத்துக்கு பிறகு இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை மகாராஜா தொடும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி தொடர்ந்து தனது படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில், விஜய் சேதுபதி அவ்வளவுதான் இனிமேல் அவரது படங்களை பார்க்க யாரும் வர மாட்டார்கள் என்று முத்திரை குத்தி விட்டார்கள் என உருக்கமாக பேசி அனைவரையும் வாய் அடைக்க வைத்துவிட்டார்.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, திவ்யபாரதி, அருள்தாஸ், பாரதிராஜா, தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வாரம் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மகாராஜா கதை: தனது மகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை தட்டிக்கேட்க ஒரு தந்தை எந்த அளவுக்கு போராடுகிறார் என்கிற கருவை எடுத்துக் கொண்டு உருவான இந்த மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் எடிட்டிங் மேஜிக் காரணமாக ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் உள்ளிட்ட எதையும் சோஷியல் மீடியாவில் ரிபீட் செய்யாமல் உள்ளதற்கு நன்றி என விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் வெற்றிவிழா சந்திப்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விமர்சனங்களால் ஓடிய மகாராஜா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில், மகாராஜா திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்தப் படத்துக்கு பெருமளவில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் படத்தின் பத்திரிகையாளர் காட்சி வெளியான பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது . பத்திரிக்கையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் சேதுபதி பேசினார்.
இவன் படம் இனிமே ஓடாது: ஒரு சில படங்களை தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், மகாராஜா படத்துக்கு ஃபிளக்ஸ் மற்றும் பேனர்கள் கட்டும்போது கூட இவன் படம் எல்லாம் இனிமே எப்படி ஓடப் போகுது, எதுக்கு இதை எல்லாம் கட்ட வேண்டும் என்று சிலர் கூறியதை கேள்விப்பட்டேன். ஆனால், என்னை சுற்றி இருந்த அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக மகாராஜா படம் அமைந்ததற்கு இயக்குநர் நித்திலன் மற்றும் தயாரிப்பாளர் சுதனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மிகவும் உருக்கமாக விஜய் சேதுபதி பேசினார். அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் டிரெய்ன், ஏஸ் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











