பாய்ஸ் மணிகண்டனுக்கு உதவும் நோக்கம் இல்லை.. அவர் ஈர்த்துட்டார்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கியிருக்கும் படம் மகாராஜா. அந்தப் படம் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்தச் சூழலில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது விஜய் சேதுபதி பேசிய பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் இப்போது விஜய் சேதுபதி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோரை வைத்து மகாராஜா படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக மகாராஜா உருவாகியிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. விஜய் சேதுபதி நீண்ட நாட்கள் கழித்து ஹீரோவாக நடித்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி பேச்சு: படம் சில நாட்களில் வெளியாகவிருக்கும் சூழலில் பத்திரிகையாளர்களிடம் பேசினார் விஜய் சேதுபதி. அப்போது அவர், "எனது குருநாதர் சீனு ராமசாமிக்கு நன்றி. அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தபோது என்னை மாதிரி ஒரு ஆள, யாருமே நம்பாத என்னை வெச்சு படத்தின் ஷூட்டிங்கை முடித்தது ஆச்சரியமான விஷயம். அதற்கு அவருக்குப் பெரிய நன்றி. எனக்கு நடிக்கவே தெரியாதபோது சி.ஜே.பாஸ்கர் எனக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்தார்.
நல்லா வருவ: அப்போது ஒருநாள் அவர் என்னிடம், 'உன்னுடைய கண்ணும், சிரிப்பும் நடிக்கும்போது நல்லா இருக்கு. நீ நல்லா வருவ என்று சொன்னார். அவருக்கு நன்றி. எனக்கு உதவி செய்த நிறையபேருக்கு நன்றி. இந்த 50 படங்களும் ஒரு மாலையாக இருந்தால் அதில் இருக்கும் ஒவ்வொரு மணியும் இங்கு இருக்கும் அத்தனை பேராலும் கோர்க்கப்பட்டிருக்கிறது. எனது மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுக்கள் என அனைத்தும் என்னை யோசிக்கத்தான் வைத்தன.
துபாயில் வேலை: நான் துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது 5 ஸ்டார் படத்துக்கும் பாய்ஸ் படத்துக்கும் ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் எனது ஃபோட்டோவை அனுப்பி வைத்தேன். மணிகண்டனை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியை எதேச்சையாக பார்த்தேன். அதை பார்க்கும்போது, 'இனிமேல் இந்த வாழ்க்கை எவ்வளவு பயமுறுத்தினாலும் பயப்பட மாட்டேன் என ஒருவர் உணர்ந்ததுபோல் இருந்தது அந்தப் பேட்டி. பெரிய பூதம், பேய் என்றாலே வாழ்க்கைதான்.
பேட்டி ஈர்த்தது: மணிகண்டன் கொடுத்த பேட்டி என்னை ஈர்த்தது. நான் உதவி பண்ண வேண்டும் என்றோ, அவரை காப்பாற்ற வேண்டும் என்றோ எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அவர் ரொம்ப சுவாரஸ்யமான ஆளாக இருந்தார். அதனால் இயக்குநரிடம் அவரை பற்றி சொன்னேன். திறமை இல்லாத யாரையும் வாய்ப்பு கொடுத்து வளர்க்க முடியாது. அது மாதிரி முயற்சி செய்து நானும் தோற்றிருக்கிறேன். மணியைப் பொறுத்தவரை வாழ்க்கை பற்றிய அவரது புரிதல் என்னை ஈர்த்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











