பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க.. சிரித்துக் கொண்டே சீரியஸான விஜய் சேதுபதி.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரை வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கும் அளவிற்கு மாதம் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார். அதன் பின்னர் பொருத்தமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என முடிவெடுத்தவர், தமிழ் சினிமாவைக் கடந்தும் பல மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். ஹிந்தியில் இவரை நம்பி, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார். இவர், விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நடிகர் சரவணனைப் பார்த்து பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கோங்க எனக் கூறினார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
சார் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தினை நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப் பெற்றது. இந்நிலையில் சார் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்துள்ளார். படத்தில் விமல், சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சார் படம் குறித்து தயாரிப்பாளர் வெற்றி மாறன் பேசுகையில், " இந்தப் படத்தில் நான் இணைந்திருப்பதால் படம் மக்களை சென்றடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதாவது சார் படத்தினை நான் தயாரித்திருப்பதால், படம் எளிதில் மக்களைச் சென்றடைந்துவிடும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. படம் நன்றாக இருந்தால், அது எந்தப் படமாக இருந்தாலும் எல்லோரிடமும் கண்டிப்பாகச் சென்றடையும்.

வெற்றிமாறன்: எனக்கு ஏற்புடைய படத்தில் என்னுடைய பெயர் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு படத்தின் கதைகள் இருந்தால் அந்தப் படங்களை தயாரிக்க ஒப்புக்கொள்வேன். சார் படத்தினைப் பொறுத்தவரையில், படத்தில் நான் எதுவும் செய்யவில்லை. படக்குழுவினரே சிறப்பாக அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவருக்கும் நன்றி. சார் என்ற பெயர் இந்தப் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. சார் படம், ஒரு ஆசிரியரின் கமிட்மென்ட் குறித்து இந்த சமூகத்திற்கு சொல்லும் படம். மூன்று தலைமுறை ஆசிரியர்களின் கதை இப்படத்தில் திரைக்கதை வழியாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருப்பதால், என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பது குறித்து சார் படம் பேசுகிறது என பேசினார்.

விஜய் சேதுபதி: அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, " படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விமல் சிறந்த நடிகர் என்பது எனக்கு முன்னரே தெரியும். கூத்துப் பட்டறையில் நான் விமலின் ரசிகன். அவர் சிறப்பாக இந்தப் படத்திலும் நடித்துள்ளார். சரவணன் சாரும் நன்றாக நடித்துள்ளார் என விஜய் சேதுபதி கூறினார். உடனே விஜய் சேதுபதி காலில் சரவணன் விழுந்தார். இதனை எதிர்பார்க்காத விஜய் சேதுபதி, " கொஞ்சம் பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கோங்க" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடங்க முயற்சித்தார்.

கோபம்: ஆனால், அதற்குள், சரவணன், விஜய் சேதுபதியிடம் இருந்து மைக்கை தன் பக்கம் இழுத்து, " நான் இதனைச் சொல்லக் கூடாது, இயக்குநரின் அனுமதி இல்லாமல் கூறுகின்றேன். அடுத்த படத்தில் நான் விஜய் சேதுபதியின் அப்பாவாக நடிக்கின்றேன். அதனால்தான் விஜய் சேதுபதி, என்னை பெரிய மனுஷன் போல நடந்துக்கோங்க எனக் கூறினார்" என பேசிவிட்டு, விஜய் சேதுபதியை அள்ளி முத்தம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பேசத் தொடங்கிய விஜய் சேதுபதி, விளம்பர இடைவேளைக்குப் பிறகு என கமெண்ட் செய்ய அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. ஆனாலும், அப்போது விஜய் சேதுபதியின் முகம் கொஞ்சம் மாறியிருந்தது.


Click it and Unblock the Notifications











