கொரோனா எதிரொலி.. ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்?
சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஞாயிறுகளில் முழு ஊரடங்கு
அதன்படி தமிழகத்தில் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50 சதவீத மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் யோசனை
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர்.

இரவு காட்சிகள் ரத்து
ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் வரும் நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல படங்கள் தள்ளிவைப்பு
இந்த சூழ்நிலையில் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் எம்ஜிஆர் மகன், தலைவி, டாக்டர் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துக்ளக் தர்பார்
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளனர். அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











