என்னுடைய மிகப்பெரிய துரதிர்ஷடம்.. எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலங்கிய விஜய் சேதுபதி!
சென்னை: எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது பலரையும் கலங்க செய்தது.
Recommended Video
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 25ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அதில் இருந்து விடுபட்ட பிறகும், அதன் பின்விளைவுகளால் உயிரிழந்தார்.

கடப்பதில்லை
அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள், பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் மட்டுமின்றி பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்தனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்பிபியின் குரலை கேட்கமால் ஒரு நாள் கூட கடப்பதில்லை.

நினைவஞ்சலிக் கூட்டம்
இன்னமும் பல ரசிகர்கள், எஸ்பிபி போல் இனி ஒரு பாடகர் வரமாட்டார் என வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அந்த கூட்டத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரசன்னா, ஜெயராம், பார்த்திபன், இயக்குநர் சீனு ராமசாமி, பாடகி சித்ரா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பெரிய வருத்தமில்லை
இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது பலரையும் கலங்க செய்தது. அவர் பேசியதாவது, 'என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் மிஸ் பண்ணியது போன்ற உணர்வு எனக்கு இருந்ததில்லை. நான் முதன்முதலில் படத்தில் நடித்த போது என்னை கட்டிப்பிடித்து வாழ்த்த என்னுடைய அப்பா இல்லையே என்ற வருத்தப்பட்டேன் அதன்பிறகு மிஸ் பண்ணியதாகவோ அல்லது பெரிய வருத்தமென்றோ எனக்கு எதுவும் இருந்தது இல்லை.

மிகப்பெரிய துரதிர்ஷ்டம்
ஆனால், எஸ்பிபி சார் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது அவரை இதுவரை நேரில் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது. திருடன் போலீஸ் படத்தின் பூஜையின்போது அவரைப் பார்க்க விரும்பினேன். ஆனால், அவரைப் பார்க்க முடியாமல் போய் விட்டது. எஸ்பிபி சாரை பார்க்க முடியாமல் போனதைதான் என்னுடைய மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

பொறாமையாக இருக்கும்
பஞ்சு அருணாச்சலத்தின் மகன் பாலு அங்கிள், பாலு அங்கிள் என்று பேசும் போதும், எஸ்பிபி சரண் மற்றும் வெங்கட் பிரபு இவர்களை எல்லாம் பார்க்கும் போதும் அவர்கள் என்னிடம் எஸ்பிபி சாரைப் பற்றிப் பேசும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அவர்களுக்கெல்லாம் எஸ்பிபி சாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததே என்று. எப்படி ஒரு மனிதரால் குரல், குடும்பம், நட்பு என எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்க முடிந்தது என்று தெரியவில்லை.

கடவுளின் நேரடி தூதுவர்
நாம் ஒன்றை அதிகமாக நேசித்தால் நாமும் அதுவாகவே மாறிவிடுகிறோம் என்று சொல்வார்கள். எஸ்பிபி சார் கலையின் வடிவமாக இருக்கிறார். எல்லா மேடையில் பாடும் போதும் யாராக இருந்தாலும் சரி மற்றவருடைய வசதி முக்கியம் என்று இருந்துள்ளார். எஸ்பிபி அன்பை பரப்புவதற்காக கடவுளால் அனுப்பப்பட்ட நேரடி தூதுவர்.

நமக்காக பாடுவார்
அவருடைய மகன் எஸ்பிபி சரண், கமல் சார் போன்றோருக்கு எவ்வளவு சோகம் இருக்கிறதோ அதே அளவு சோகம் எங்களைப் போன்ற அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இருக்கிறது. எஸ்பிபி சார் எங்களின் சொத்து என பெருமையாக சொல்லிக் கொள்வோம். பாலு சார் நிலவாக இருப்பார் நமக்காக பாடுவார் என நம்புகிறேன்.

வருத்தப்பட்டேன்
அவர் ஒரு உன்னதமான மனிதர். வெளியூரில் இருந்ததால், எஸ்பிபி சாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லையே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி.. இவ்வாறு உருக்கமாக பேசினார் நடிகர் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











