அட செம காம்போவா இருக்குமே.. அந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் பட்டையை கிளப்பியிருந்தார் சேது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; விஜய் சேதுபதி அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற ஆவல் அவரது ரசிகர்களிடையே அதிகமாக எழுந்திருந்தது. இந்நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டியவர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட ஏராளமான படங்களில் அப்படி நடித்த அவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படத்தைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பால் வித்தியாசம் காட்டிய அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

சோதனை முயற்சிகள்: ஒருபக்கம் கமர்ஷியல் ரீதியாக அவர் ஹிட் கொடுத்தாலும் மறுபக்கம் ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி போன்ற படங்களில் சோதனை முயற்சிகள் செய்யும் விதமாக நடிக்கவும் செய்தார். இதன் காரணமாக வித்தியாசம் காட்டும் நடிகர் என்ற பெயரையும் பெற்றார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியது என்பதும் உண்மைதான். இருந்தாலும் சினிமாவில் இதுபோன்று நடப்பது சகஜமான ஒன்றுதான் என்று சேது அதையும் கடந்து சென்றார்.
வில்லன் சேது: நல்ல நடிகர், சக்சஸ்ஃபுல் ஆக்டர் என்று பெயர் எடுத்த அவரோ வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக தோன்றி மாஸ் காண்பித்தார். அது அவருக்கு கைகொடுத்தாலும் அவரது ரசிகர்கள் அதை பெரிதாக விரும்பவில்லை. விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். அதன்படி தான் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சேது ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார்.
மெகா ஹிட் மகாராஜா: அந்தவகையில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்தார் அவர். அதனை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். 50ஆவது படம் கோலிவுட்டில் சில ஹீரோக்களுக்கு மட்டுமே ஹிட்டாகியிருக்கிறது. அந்த லிஸ்ட்டில் விஜய் சேதுபதியை கொண்டு வந்து சேர்த்தது மகாராஜா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நித்திலனின் மேக்கிங், விஜய் சேதுபதியின் நடிப்பு என அத்தனையும் அட்டகாசமாக இருக்க; இங்கு மட்டுமின்றி சீனாவிலும் படம் சக்கைப்போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்ன், விடுதலை 2: அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி எஸ்.தாணு அந்தப் படத்தை தயாரிக்கிறார். அந்தப் படமும் விஜய் சேதுபதியின் கரியரில் கண்டிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்பதில் அவரது ரசிகர்கள் ரொம்பவே உறுதியாக இருக்கின்றனர்.
அடுத்த படம்: இந்நிலையில் ட்ரெய்ன் படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும்; அந்தப் படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்களுக்கு கமர்ஷியல் ரீதியாக மெகா ஹிட் கொடுத்தவர் ஹரி. இப்போது அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இவருக்கும் கமர்ஷியல் ரீதியாக ஒரு மெகா ஹிட்டை ஹரி கொடுப்பாரா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











