‘ஆரஞ்சு மிட்டாய்’... 55 வயது தாத்தாவாகி ஆம்புலன்சில் சுற்றும் விஜய் சேதுபதி!
சென்னை: கதைக்கு தக்கபடி தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் நாயகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தற்போது ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தில் 55 வயது தாத்தாவாக நடித்து வருகிறார்.
நிஜவாழ்க்கையில் தனது பிள்ளைகள் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் சூழலிலும், சிலர் திரையில் கல்லூரி செல்லும் நாயகர்களாக நடித்ததுண்டு. ஆனால், தற்போது அந்த நிலை மாறி கதைக்கு தகுந்த படி நடிக்கும் பக்குவ நிலையில் சில நாயகர்கள் உள்ளனர். விஜய் சேதுபதி அவர்களில் முக்கியமானவர்.
அறிமுகமான புதிதிலேயே சூது கவ்வும் படத்தில் 40 வயதுக்காரராக நரை முடி தோற்றத்தில் துணிந்து நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது தனது புதிய படமான ஆரஞ்சு மிட்டாயில் 55 வயது தாத்தாவாக நடிக்க இருக்கிறார். அதுவும் நோயாளித் தாத்தாவாக.
இந்நிலையில், தனது தாத்தா கதாபாத்திரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முக்கிய கதாபாத்திரங்கள்...
இந்தப் படமானது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி அமைந்துள்ளது. அதாவது, என்னுடன் சூது கவ்வும் படத்தில் இணைந்து நடித்த ரமேஷையும், என்னையும் மையமாக வைத்து இந்த கதை நடக்கின்றது.

இரண்டு நாள் கதை....
எங்கள் வாழ்வில் இரண்டு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இந்தப் படம் தெரிவிக்கின்றது.

ஆம்புலன்ஸ் பயணம்...
55 வயதுடைய ஒரு நோயாளியாக வரும் நான் பெரும்பாலான நேரங்களில் ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருப்பேன். படம் முழுவதும் இந்தத் தோற்றத்தில்தான் வருகின்றேன்.

ஆரஞ்சு மிட்டாய்...
ஆரஞ்சு மிட்டாயானது இனிப்பும், புளிப்பும் சேர்ந்த சுவையைக் கொடுப்பதுபோல் வாழ்க்கையிலும் இத்தகைய சுவைகள் கலந்திருக்கும் என்பதை இந்தப் படம் சித்தரிக்கின்றது.

உணர்ச்சிகரமான படம்...
வாழ்வின் எளிய பக்கத்தையும் அதே சமயம் உணர்ச்சிகரமான பக்கத்தையும் இந்தப் படம் வெளிப்படுத்தும்' என இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சொந்தப்படம்...
அவரது சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்தில், விஜய் சேதுபதி இணை திரைக்கதைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











