'பட்டாஸ்'... மேடையில் கோபப்பட்ட விஜய் சேதுபதி... பயத்தில் படக்குழு..!
துக்ளக் தர்பார் பட பூஜையில் பட்டாசு வெடிக்கப்பட்டதற்கு நடிகர் விஜய் சேதுபதி கோபப்பட்டார்.
சென்னை: துக்ளக் தர்பார் படவிழாவில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடிகர் விஜய் சேதுபதி கோபப்பட்டார்.
விஜய்சேதுபதி அதிதிராவ் ஹெய்தாரி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய் சேதுபதி கூட்டணி இதில் மீண்டும் இணைகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு விஜய் சேதுபதி வந்த போது, சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய விஜய் சேதுபதி, தான் வந்தபோது பட்டாசு வெடிக்கப்பட்டதற்காக வருத்தப்பட்டார். பட்டாசு வெடிக்க யார் ஆலோசனை கூறியிருந்தாலும், அவர்கள் மீது தான் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினார். இதனால் படக்குழுவை சேர்ந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.
காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தீபாவளி போதுகூட குறிப்பிட்ட நேரங்களில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதனை மீறியவர்களை போலீசார் கைது செய்த சம்பவங்களும் நடந்தது.
இந்த சூழ்நிலையில் தான், தனது விழாவில் பட்டாசு வெடித்தவர்களை விஜய் சேதுபதி கண்டித்துள்ளார். வேறு யாரோ இதற்கு எதிராகப் பேசுவதற்கு முன், தானே தனது ரசிகர்களுக்கு சரியாக அறிவுரையை வழங்கி இருக்கிறார். தன்னைப் பின் தொடர்பவர்கள் வழி தவறும்போது, அதை சரி செய்வது தான் நல்ல தலைவனின் குணம். அதைச் சரியாகச் செய்துள்ளார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











