விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட 'வசந்தகுமாரன்'!
ஸ்டுடியோ 9 என்ற நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து வசந்த குமாரன் என்ற படத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தியது நினைவிருக்கலாம்.
இப்போது அந்தப் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருமாறு விஜய சேதுபதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் விஜய் சேதுபதியால் தங்கள் நிறுவனத்தையே மூடிவிடப் போவதாக வேறு கூறியுள்ளது.
பரதேசி, சூது கவ்வும், சலீம் போன்ற படங்களை வெளியிட்ட நிறுவனம்தான் இந்த ஸ்டுடியோ 9.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் வசந்த குமாரன் என்ற படத்தை ஆரம்பித்தது, விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி!
ஆனால் படம் தள்ளிப் போனது. விஜய் சேதுபதி வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டார். ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் விஜய் சேதுபதியைக் குற்றம்சாட்டி அறிக்கைவிட்டுள்ளது இந்த ஸ்டுடியோ 9.
விஜய் சேது அட்வான்ஸாக வாங்கிய பணத்தைக் கூட தரவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சினிமாவே வேண்டாம் என்று நிறுவனத்தை இழுத்து மூடும் நிலையில் உள்ளோம் என்றெல்லாம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விஜய் சேதுபதி, இதுகுறித்து கருத்து சொல்லவில்லை. கேட்டபோது, இந்தப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் பேசி வருகின்றன. நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றால்.
விஜய் சேதுபதிக்கு அந்த நிறுவனம் தந்த முன்பணம் சில லட்சங்கள்தானாம். இந்தப் பணத்தை திரும்பத் தராததற்காக நிறுவனத்தையே இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்டுடியோ 9 கூறுவது ஆச்சர்யம் தருவதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர். அந்த சில லட்சங்களை மட்டும் நம்பியா சினிமா வந்தார்கள் இந்த நிறுவனத்தினர்?
விஜய் சேதுபதியும் யாரையும் ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானதில்லை இதுவரை. நீர்ப்பறவை படத்துக்குப் பிறகு சரியான படம் அமையாத நிலையில் இருந்த தனது குருவான சீனு ராமசாமியை அழைத்து, சத்தமின்றி ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர். அனைவரிடமும் பொதுவாக நல்ல பெயர் பெற்றிருப்பவர். எதனால் இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பதுதான் பேச்சாக இருக்கிறது கோடம்பாக்கத்தில்!


Click it and Unblock the Notifications











