விஜயகாந்த் போல கர்ஜித்த விஜய்.. அதே அளவுக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்குமா?.. மாநாடு எப்படி இருந்தது?
சென்னை: பல ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்த் பேச்சில் என்ன வீரியம் இருக்குமோ, அதே வீரியம் விஜய்யின் பேச்சில் இருந்தது. அவர் தொடர்ந்து 45 நிமிடம் பேசினாலும், எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் பேசி தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வந்த நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல உதவிகளை செய்து வந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி களத்தில் குதித்த தளபதி. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்தது மட்டுமில்லாமல் கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகம்: இதைத்தொடர்ந்து கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கட்சியின் கொள்கைகளை மாநாட்டில் அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் வி.சாலையில் இன்று மாலை நடைபெற்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டிற்காக தொண்டர்கள் காலை முதலே அங்கு குவிந்தனர். மாநாடு அறிவித்தபடி மாலை 4 மணிக்கு தொடங்கியது. கட்சியின் தலைவர் விஜய் மேடையில் கட்சி கொடியை கழுத்தில் அணிந்து கொண்டு, தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி வந்தார்.
பயப்பட மாட்டேன்: இதைத்தொடர்ந்து, ரிமோட் மூலம் 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி வைத்தார். இந்த கட்சி கொடிக்காக 225 சதுர அடி நிலத்தை விவசாயிடம் இருந்து ஐந்தாண்டுக்கு குத்தகைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விஜய் தன் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபாவிடம் ஆசிவாங்கிக்கொண்டு பேசினார். அப்போது,நான் பாம்பை பார்த்து பயப்பட மாட்டேன், அதனுடன் விளையாடுவேன் என்றார்.
மேலும், அரசியலுக்கு நாம புதுசு, கத்துக்குட்டி என்று மற்றவர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஆனால் அரசியலை சிரித்துக் கொண்டே எதிர்கொள்வது நம் ஸ்டைல். அரசியலில் கவனமாகத்தான் களமாட வேண்டும். கட்சி நிர்வாகிகளின் பெயரை சொல்லி அவர்களே, இவர்களே என்று ஏன் அழைக்க வேண்டும்? இப்படி அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, இங்கு அனைவரும் சமம்தான். ஒட்டுமொத்தமாக உங்கள் எல்லோருக்கும் என் உயிர் வணக்கம் என்றார்.
கட்சியின் கொள்கை: பெண்களை கொள்கை தலைவராக ஏற்ற முதல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் தான். அப்படி இரு பெண்களில் ஒருவர் வேலு நாச்சியார், மற்றொருவர் அஞ்சலை அம்மாள். இவர்கள்தான் நம் கட்சியின் கொள்கை தலைவர்கள். நம்மை யாரும் விசிலடிச்சான் குஞ்சு என சொல்லாமல் வேகமானவர்கள், விவேகமானவர்கள் என சொல்ல வைக்க வேண்டும். சொல்வது மட்டுமில்லாமல், செயல், செயல் இதுதான்.நம் கட்சியின் கொள்கை இதை நாம் செய்து முடிப்போம், அதுவரை நெருப்பாக இருப்போம் என்று மிகவும் ஆக்ரோஷமாக கர்ஜித்து பேசினார். இவரின் இந்த பேச்சை கேட்கும் போது கேப்டன் விஜயகாந்தை நினைவு படுத்தியது. அவர் கட்சித் தொடங்கிய போது விஜயகாந்த் ஒருவருக்காக மட்டுமே பல லட்சம் பேர் கூடினார்கள். தற்போது விஜயின் மாநாட்டில் அவர் ஒருத்தருக்காகவே பல லட்சம் கூடினார்கள். உண்மையில் விஜய்யின் முதல் மாநாடு மிரட்டலாகத்தான் இருந்தது.


Click it and Unblock the Notifications