சி. ஜோசப் விஜய் எனும் நான்.. முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.. ஒருவழியாக சாதிச்சாச்சு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. அதனையடுத்து பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை அடைந்தது. இதனையடுத்து நேற்று நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனையடுத்து இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் கட்சி பத்து தொகுதிகளைகூட தாண்டாது என்றுதான் எல்லோருமே ஆரூடம் கூறினார்கள். இன்னும் சிலரோ முதல் தேர்தலில் விஜயகாந்த் பெற்ற 8 விழுக்காடு வாக்குகளைகூட பெறுவது விஜய்யால் கடினம் என்றே பலர் கருதினார்கள். ஆனால் மே நான்காம் தேதி அத்தனையையும் புரட்டி போட்டுவிட்டன தேர்தல் முடிவுகள். தவெக கட்சி தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 108 தொகுகளை அள்ளியது அக்கட்சி.

பெரும்பான்மை இல்லை: ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லை. மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்பதால்; ஆளுநர் அதனை நிரூபிக்க சொன்னார். அதன் காரணமாக மற்ற கட்சிகளுடனான தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது தவெக. முதலில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பத்து வருட கூட்டணியை திமுகவுடன் முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இனிவரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தலில் எல்லாம் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்.
விசிகவும் ஆதரவு: காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது காரணமாக நேற்று நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகரும் தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதன் காரணமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.
சூப்பராக வந்த விஜய்: அதனையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு இன்று விஜய் குடும்பத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள், திரிஷா உள்ளிட்டோர் வந்திருந்தார்கள். விஜய் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து வந்து பிறகு கருப்பு கோட்டினை போட்டுக்கொண்டார். அவர் உள்ளே வந்தபோது ஒட்டுமொத்த அரங்கமும் கைத்தட்டல்களால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். எஸ்.ஏ.சி, ஷோபாவின் முகத்தில் அவ்வளவு பெருமிதங்கள் வெளிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற விஜய்: இந்நிலையில் இன்று காலை பத்து மணி அளவில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் வெங்கடரமணன், பிரபு, ராஜ்மோகன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றூக்கொண்டார்கள். விஜய் பதவியேற்பதை மக்கள் பார்ப்பதற்கு வசதியாக சென்னை முழுவதும் 20 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேரு அரங்கத்தில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டதை தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
