Vijay: “ரோகிணி தியேட்டர் சேதம்... இனி ஆக்ஷன் எடுப்போம்...” விஜய்க்கு ஃபைனல் வார்னிங்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
சென்னை ரோகிணி திரையரங்கில் லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், விஜய் ரசிகர்கள் செய்த அராஜகத்தால் ரோகிணி திரையரங்கம் துவம்சம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்காக விஜய்க்கு ஃபைனல் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஃபைனல் வார்னிங்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

முன்னதாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், ட்ரெய்லரை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, சென்னையில் சில முக்கியமான இடங்களில் லியோ ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து சன் டிவியின் யூடியூப் தளத்திலும், திரையரங்குகளிலும் லியோ ட்ரெய்லர் வெளியானது.
லியோ ட்ரெய்லரை பார்க்க சில திரையரங்குகளில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது லியோ ட்ரெய்லரை பார்ப்பதற்காக மட்டுமே ஒருசில ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டன. அப்படி சென்னை ரோகிணி திரையரங்கிலும் விஜய் ரசிகர்களுக்காக ஒரு ஸ்க்ரீனில் லியோ ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஓவர் எமோஷனலாகிவிட ரோகிணி தியேட்டரின் நிலைமையோ படுமோசமானது.
லியோ ட்ரெய்லரில் இருந்த ஆக்ஷன் காட்சிகளை விட, விஜய் ரசிகர்கள் செய்த அலப்பறையில் ரோகிணி தியேட்டரே காயலான் கடை போல ஆனது. 400 இருக்கைகள் உட்பட மொத்தம் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. ஆனாலும் இதுபற்றி ரோகிணி திரையரங்கம் சார்பில் காவல்துறையில் எந்த புகாரும் வழங்கப்படவில்லை. அதேநேரம் இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையானது.
தனது ரசிகர்கள் இந்தளவுக்கு எல்லை மீறியபோதும், விஜய் அவர்களை கண்டிக்கவும் இல்லை, தியேட்டர் நிர்வாகத்துக்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை. அரசியல் கனவுடன் வலம் வரும் விஜய், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ரோகிணி தியேட்டர் சம்பவத்திற்கு விஜய் தான் பொறுப்பு என, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கொடுத்த பேட்டியில், "லியோ ட்ரெய்லரை பார்க்கச் சென்ற ரசிகர்கள் ரோகிணி தியேட்டரை சேதப்படுத்தியதற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். லியோ ட்ரெய்லருக்கே இந்த நிலை என்றால், படம் வெளியாகும் போது இன்னும் என்னாகுமோ என திரையரங்க உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











