'ஜில்லா மெகா வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி' - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்
சென்னை: ஜில்லா படத்தின் பெரும் வெற்றிக்குப் பாடுபட்ட ரசிகர்கள், ஆரோக்கியமான முறையில் விமர்சித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என்றார் நடிகர் விஜய்.
விஜய் நடித்த 'ஜில்லா' படம் கடந்த 10-ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் நடந்தது.

நடிகர் விஜய், இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 'ஜில்லா' படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர்.
சென்னை விநியோகஸ்தர் பேசுகையில், கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இந்தப் படம் ரூ 1.6 கோடிகளை குவித்துள்ளதாகவும், இது விஜய் படங்களின் ஆல்டைம் ரெகார்ட் என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் பேசுகையில், "ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர்.
தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம்.
'ஜில்லா' படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த 5 படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன," என்றார்.


Click it and Unblock the Notifications











