சுகர் மாத்திரை வாங்க காசு இல்லை.. கண்கலங்கிய பாவா லட்சுமணன்.. தேடி வந்து உதவிய பாலா!
சென்னை: மருத்துவசெலவுக்கு கூட காசு இல்லை கண்கலங்கிய பாவா லட்சுமணனுக்கு பாலா தேடிவந்து உதவி செய்துள்ளார்.
நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணன் சரத்குமார் நடித்த மாயி படத்தில் வாமா மின்னல் என்ற காமெடி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
அந்த படத்திற்கு பிறகு வடிவேலு, விவேக் என பல நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு படவாய்ப்பு இல்லாததால் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறார்.

நகைச்சுவை நடிகர்: இந்நிலையில், பாவா லட்சுமணன் அண்மையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தற்போது படவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். கொரோனா காலத்தில் நான் இறந்து விட்டேன் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட ஓட்டினார்கள் என்றார். அந்த நேரத்தில் எனக்கு சாப்பாடு போட்டது விவேக், மயில்சாமி, மனோபாலா தான்.
மருத்துவ செலவுக்கு காசு இல்லை: மயில்சாமி அவர்கள் எனக்கு சுகர் மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்தார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மயில்சாமிக்கு போன் பண்ணா போதும், கவரில் பணத்தை வைத்து கொடுத்துவிடுவார். இப்போது அவர்கள் இல்லாததால், மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார்.

பாலா: இந்த பேட்டியை பார்த்த பல நடிகர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, பாவா லட்சுமணனை மருத்துவமனையல் நேரில் சந்தித்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவி உள்ளார். மேலும்,சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாவா லட்சுமணனிடம் சிறிது நேரம் மனம் விட்டு கலகலப்பாக பேசி உள்ளார்.
குவியும் பாராட்டு: மேலும், அக்கவுண்ட்டில் மொத்தமே 32 ஆயிரம் தான் இருந்ததாகவும், அவற்றை மொத்தமாக எடுத்துக்கொண்டு 2 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உங்களை பார்க்க வந்தேன் அண்ணேன் என்று 30 ஆயிரத்தை கொடுத்து உதவி உள்ளார். பாலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











