பெத்த பொண்ணு பிரிஞ்சி போனாலும் தைரியமா இருக்கீங்களே.. பாக்கியாவை வம்பிழுக்கும் அக்கம்பக்கத்தினர்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் இனியா மற்றும் அவரது தாத்தா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி வீட்டில் வசித்து வருகின்றனர்.
பாக்கியா கையால் ருசியாக சாப்பிட்டு வந்த கோபியின் அப்பாவிற்கு ராதிகாவின் சமையல் சிறிதும் பிடிக்கவில்லை.
இதனிடையே இனியாவும் ராதிகாவிடம் எடுத்தெறிந்து பேசுவதால் கோபியின் நிலைமை தர்மசங்கடமாக மாறியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் மற்றும் எபிசோட்கள் ரசிகர்கள் கட்டிப் போட்டுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட கோபியின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. தான் தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்று அவர் எண்ணும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

வீட்டை விட்டு வெளியேறிய இனியா
இதனிடையே இனியா மற்றும் கோபியின் தந்தை இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, கோபியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். தன்னுடைய அப்பாவின் வீட்டிற்கு வந்தாலும் தொடர்ந்து ராதிகாவிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல் இருக்கிறார் இனியா. இதனால் ராதிகா மிகுந்த கோபத்துடன் கோபியிடம் முகம் சுளிக்கிறார். தன்னை கேள்வி கேட்க ராதிகாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறுகிறார் இனியா. இதனால் கோபியின் நிலை தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறது.

ராதிகாவின் சமையலை விமர்சிக்கும் கோபி அப்பா
கோபி வீட்டிற்கு வந்தாலும், சாப்பிடுவதற்கு பாக்கியா வீட்டிற்கே செல்கிறார் கோபியின் அப்பா. தொடர்ந்து ராதிகாவின் சமையலையும் விமர்சிக்கிறார். சாம்பாரில் பருப்பையே காணோமோ என்று ராதிகாவை கலாய்க்கிறார். தனது வீட்டில் சிறப்பான சாப்பாட்டையே விமர்சித்துவிட்டு சாப்பிடும் கோபி, ராதிகாவிடம் வாய் மூடி அமைதியாக இருப்பதை தன்னுடைய மனைவி ஈஸ்வரியிடம் சொல்லி அங்கலாய்க்கிறார்.

வம்பிழுக்கும் அக்கம்பக்கத்தினர்
இதனிடையே, இனியா மற்றும் அவரது மாமனார் ராமமூர்த்தி இருவரும் கோபியின் வீட்டிற்கு சென்றது குறித்து பாக்கியலட்சுமியிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி வம்பிழுத்து வருகின்றனர். அவர் காலை வேளையில் வாக்கிங் செல்லும்போது இதுகுறித்து பக்கத்து வீட்டு பெண் கேள்வி எழுப்புகிறார். தான் தன்னுடைய பெண்ணை மிகவும் கட்டுக் கோப்பாக வளர்த்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கடுப்பாகும் பாக்கியா
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் பாக்கியா. ஆனாலும் அந்தப் பெண்ணை சமாளித்து தொடர்ந்து பதிலளிக்கிறார். எப்படி பெற்ற பெண்ணை பிரிந்து தைரியமாக பாக்கியா இருக்கிறார் என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பி பாக்கியாவை கடுப்பேற்றுகிறார். தொடர்ந்து அந்த இடத்தில் வரும் செல்வியை பார்த்துவிட்டு அந்தப் பெண் நடையை கட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











