விரைவில் முடிகிறதா பாரதி கண்ணம்மா தொடர்.. நெகிழ்ச்சியான ப்ரமோவை வெளியிட்ட குழு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்து வந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது டிஆர்பியில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் ஒரே மாதிரியான காட்சிகள் ரசிகர்களை சலிப்படைய வைத்த நிலையில், தற்போது கதைக்களத்தில் தீவிரவாதிகளை கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.
கடந்த சில தினங்களாக பாரதியின் மருத்துவமனை தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் அதில் சிக்கியுள்ளவர்களை மீட்க பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து போராடுவதாகவும் எபிசோட்கள் காணப்படுகின்றன.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராகத்தான் பாரதி கண்ணம்மா ஒரு காலத்தில் இருந்தது. இதன் லீட் கேரக்டர்கள் பாரதி மற்றும் கண்ணம்மா இடையிலான உணர்வுப்பூர்வமான கணவன் -மனைவி உறவை சிறப்பாக காட்சிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தது. வெண்பாவின் வில்லத்தனமும் தொடரின் வெற்றிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

ஒரே மாதிரியான காட்சிகள்
இதனிடையே, இதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியின் விலகல் உள்ளிட்ட பல மாற்றங்கள் இந்தத் தொடரில் நடந்தது. இந்த மாற்றங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இந்தத் தொடரில் தொடர்ந்து பாரதி, கண்ணம்மாவின் உறவுநிலை, அவர்களின் பிரிவு குறித்தே தொடர்ந்து பேசப்பட்டது.

ரசிகர்களை வெறுப்படைய வைத்த தொடர்
தொடர் என்றால் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். அந்த விருப்பத்தை இந்தத் தொடர் பூர்த்தி செய்யவில்லை. மாறாக அரைத்த மாவையே அரைத்து எப்போது தொடர் முடியும் என்று ரசிகர்களையே கேட்க வைத்தது.

900 எபிசோட்களை கடந்த பாரதி கண்ணம்மா
தற்போது 900 எபிசோட்களை இந்தத் தொடர் கடந்துள்ளது. இதனிடையே 1000 எபிசோட்களை கடக்க வேண்டும் என்று இயக்குநர் நினைக்கிறாரோ என்னவோ, கிளைக்கதைகளை இந்த தொடரில் சேர்த்தார். வெண்பாவிற்கு திருமணம் என்று ஒரு கதை தனியாக சென்றது.

அனைவரையும் மீட்ட அதிரடி படையினர்
இதனிடையே பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் சீஸ் செய்ததாக தற்போது கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது. இதில் பெண்களிடம் தவறாக நடக்கும் தீவிரவாதியை துவம்சம் செய்கிறார் கண்ணம்மா. தொடர்ந்து அதிரடிப் படையினர் இந்த மருத்துவமனையை கையகப்படுத்தி அனைவரையும் மீட்கும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.

கண்கலங்கிய கண்ணம்மா
இதில் பாரதியை காணாமல் கலங்கும் கண்ணம்மா, அவரை தேடி செல்கிறார். அப்போது ஒரு ரூமில் அவர் கட்டிப்போடப்பட்ட நிலையில் உள்ளதை பார்க்கிறார். கண்ணம்மாவை உள்ளே வரவேண்டாம் என்று பாரதி கூறுகிறார். காரணம் அவரது உடம்பில் வெடிகுண்டு கட்டப்பட்டுள்ளதுதான். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் உணர்வுமிகுதியால் பாரதியை போய் கட்டுக் கொள்கிறார் கண்ணம்மா.

விரைவில் முடிகிறதா பாரதி கண்ணம்மா?
இவர்கள் இருவரும் தற்போது சேர்ந்துள்ள நிலையில், விரைவில் சீரியலை முடிக்கப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கதையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் அடுத்ததாக அரைக்க எந்த மாவும் இல்லாததால் இயக்குநர் இந்த முடிவை விரைவில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











