Pandian stores : தீவிர சிகிச்சை பிரிவில் ஐஸ்வர்யா.. பணமில்லாமல் திண்டாடும் கண்ணன்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணன் -தம்பிகள் பிரிவு அவர்களை மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்களையும் வத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.
அண்ணன்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தனியாக பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய வளைகாப்பை செய்வதற்கு யாரும் இல்லை என்று ஐஸ்வர்யா, கண்ணனிடம் வேதனை படுகிறார்.

தீவிர சிகிச்சை பிரிவில் ஐஸ்வர்யா : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள், குழந்தைகள் என கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும்வகையில் அமைந்த இந்தத் தொடரில் அவ்வப்போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்கு, அதன்மூலம் ஏற்படும் பிரிவு என்பதை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகும்.
அந்த வகையில், மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்படும் பிரச்சினை பூதாகரமாகி ஜீவா, வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நிர்வகிக்க ஆளின்றி, அண்ணன் மூர்த்தியே சரக்குகளை டெலிவரி செய்கிறார். தொடர்ந்து இதை பார்க்கும் ஜீவா மன வருத்தமடைகிறார். ஆனால் முன்னதாக இந்த வேலைகளை அவரே தனியொரு ஆளாக பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முல்லையின் வளைகாப்பு, அனைவரின் வருகையுடன் மிகவும் சிறப்பாக நடந்து முடிகிறது. வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்துக் கொண்டுள்ள கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இதுபோன்ற சந்தர்ப்பம் இல்லாததால், ஐஸ்வர்யா தன்னுடைய வருத்தத்தை கண்ணனிடம் பதிவு செய்கிறார். தனக்கு இதுபோல வளைகாப்பு நடத்த யாரும் இல்லை என்று அவர் கண்ணனிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன்னுடைய அண்ணி, தனம், வளைகாப்பை நடத்துவார் என்று கண்ணன் சமாதானம் சொல்கிறார்.
இதனிடையே, டான்ஸ் ஆடி வீடியோ போடுவதாக கூறி, ஐஸ்வர்யா கீழே விழுகிறார். இதனால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகிறார். மருத்துவமனையில் முன்பணமாக 7,500 ரூபாயை கட்ட சொல்கிறார்கள். ஆனால் கண்ணனின் கார்டில் பணம் இல்லை என்று கூறி ஊழியர் கார்ட்டை திருப்பி கொடுத்து விடுகிறார். இதனால் அவமானத்திற்குள்ளாகும் கண்ணன், இந்த இக்கட்டான சூழலில் தன்னுடைய அண்ணனின் உதவியை நாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தான் அரசு ஊழியரின் மனைவி என்ற கர்வத்துடன்தான் ஐஸ்வர்யா, கண்ணனை அவரது அண்ணனிடமிருந்து பிரித்து தனியாக அழைத்து வருகிறார். இந்நிலையில், தற்போது பணத்திற்காக மீண்டும் கண்ணன், தன்னுடைய அண்ணனிடம் சென்று நிற்க வேண்டிய சூழலை ஐஸ்வர்யாவே ஏற்படுத்தியுள்ளார். இதனால் மீண்டும் சீரியலின் கதைக்களம் எவ்வாறு அமையும் என்பதை அறிய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











