TVK Maanadu: மாநாட்டுக்கு வந்தீங்களா? விரட்டி அடிக்கப்படும் விஜய் ரசிகர்கள்.. மதுரையில் நடந்த சம்பவம்!
மதுரை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், அவர் நடத்தும் இரண்டாவது மாநில மாநாடு இன்று அதாவது, ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் தொடங்கி, கட்சி நிர்வாகிகள் என பலரும் மதுரையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். மாநாடு இன்றுதான் என்றாலும் தொண்டர்களும் ரசிகர்களும் பல ஆயிரக்கணக்கில் மதுரைக்கு நேற்றே சென்று விட்டார்கள். மாநாட்டிற்கு வந்துள்ளார்கள் என்றால், அவர்களுக்கு ஹோட்டல்களில் அறை கொடுக்க முடியாது என, பல ஹோட்டல்களில் தெரிவித்துள்ளனர்.
அதாவது, நடிகர் விஜய் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கப் போகிறார் என்ற பேச்சு ஏற்கனவே சில ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், அவர் கட்சி தொடங்கிய பின்னர் அது உறுதி ஆனது.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடத்தப்படவுள்ளது. முதலில் மாநாட்டிற்கு 25ஆம் தேதி தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருவதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவே, 21ஆம் தேதி மாநாட்டை நடத்திக் கொள்ள காவல்துறை பரிந்துரைத்ததை அடுத்து மாநாட்டுத் தேதி 21 ஆம் தேதி மாற்றப்பட்டது. 25 ஆம் தேதி விஜய்யின் திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநாடு: இந்நிலையில் மாநாட்டிற்கு விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அதிக அளவில் மதுரையை நோக்கி வந்து கொண்டு உள்ளார்கள். மாநாட்டில் விஜய் மாலையில்தான் பேசவுள்ளார் என்றாலும், மேடைக்கு அருகிலேயே அமர்ந்து விஜய்யை அருகில் பார்த்துவிட வேண்டும் என ஆர்ப்பரித்துக் கொண்டு மாநாட்டுத் திடலை நோக்கி தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் படையெடுத்து கொண்டு உள்ளார்கள். ஏற்கனவே சேர்கள் வழங்க ஒப்புக் கொண்ட ஒப்பந்ததாரர்கள் கடைசி நேரத்தில் சேர்கள் வழங்க மறுத்த நிலையில், கேரளாவில் இருந்து சேர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல், மாநாட்டு திடலில் நடப்பட்ட 100 அடி கொடிக்கம்பம், நடப்பட்ட சில வினாடிகளில் சரிந்து விழுந்தது.

விரட்டியடிப்பு: இது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றே மதுரைக்குச் சென்ற தவெகவினருக்கு அறைகள் கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள், ஹோட்டல் நிர்வாகிகள். தவெகவினர், கட்சித் துண்டுடன் ஹோட்டலுக்குச் சென்றாலே, அறைகள் இல்லை என்று கூறிவிடுகிறார்களாம். துண்டு இல்லாமல் சென்றால் எதற்காக மதுரை வந்துள்ளீர்கள் என்று கேட்கப்படுகிறதாம். மாநாட்டிற்கு வந்துள்ளோம் என்றால், மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு அறை இல்லை என்று வெளியே விரட்டி விட்டுள்ளார்கள்.
காரணம் என்ன?: வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தவெகவினரை இடத்தை காலி பண்ணுங்க என மிரட்டியும் உள்ளார்கள். ஹோட்டல் நிர்வாகிகள் இவ்வாறு சொல்ல காரணம், விக்கிரவாண்டி மாநாட்டில், மாநாடு முடிந்ததும், ஆயிரக்கணக்கான சேர்களை தவெகவினர் உடைத்து துவம்சம் செய்தனர். சென்னை ஆர்ப்பாட்டத்தில், பேரிகார்டுகளை தவெகவினர் சேதாரம் செய்தனர். இது போன்ற செயல்கள் தான் காரணமாக இருக்கும் எனவும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











