Baakiyalakshmi: அமிர்தாவின் முன்னாள் கணவர் குறித்து தெரியவந்த உண்மை.. வீட்டிற்கே வந்த மாலினி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் எழில் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் உயிருடன் வந்த நிலையில், அடுத்தது எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோல, செழியன் -மாலினி இடையில் ஏற்பட்டுள்ள உறவால், செழியனின் வாழ்க்கையிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரமோவால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை பார்க்க முடிகிறது. தன்னுடைய கணவன் கோபி கேட்ட விவாகரத்தை தானே முன்வந்து கொடுத்திருந்தார் பாக்கியா. தொடர்ந்து கோபி வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக அமைந்தார். இதனால் கோபிக்கு தன்னுடைய வீட்டில் மரியாதை இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் கோபி, பாக்கியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து தடையாக இருக்கிறார்.

பாக்கியாவின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் கோபி மற்றும் ராதிகா இருவரும், கட்டம் போட்டு காய் நகர்த்தி வருகின்றனர். பாக்கியாவிற்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துவந்த கேன்டீன் கான்டிராக்ட் அவரை விட்டு போக காரணமாக அமைகிறார் ராதிகா. இதனால் மிகுந்த உற்சாகமடைகிறார் கோபி. தன்னை மீறி தன்னுடைய குடும்பத்தினரிடம் பாக்கியா நெருக்கமாவதும் உயர்வடைவதும் இதனால் குறையும் என்று அவர் கருதுகிறார்.
இதனிடையே அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்திக்கும் சூழலில் பாக்கியா உள்ளார். தன்னுடைய தொழிலில் ராதிகாவால் பிரச்சினைக்குள்ளாகும் பாக்கியாவிற்கு அடுத்தடுத்து குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இறந்ததாக கருதப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் திரும்பவந்த நிலையில், தன்னுடைய மனைவிக்கு மறுமணம் நடந்ததை கண்டு, ஆத்திரமடைகிறார். தன்னுடன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அழைத்து செல்ல அவர் துடிக்கிறார்.

இதனிடையே தன்னுடைய மகன் குறித்த இந்த உண்மையை சென்னையில் பாக்கியாவை நேரில் சந்தித்து கூறுகின்றனர் கணேஷின் பெற்றோர். இதை கேட்டு அதிர்ச்சியடையும் பாக்கியா, அடுத்ததாக என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்று ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தன்னுடைய அடுத்த மகன் செழியன் வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அறிந்துக் கொள்கிறார் பாக்கியா.

செழியன் -மாலினி விவகாரம் குறித்து முன்னதாக அறிந்துக் கொண்டுள்ள பாக்கியா, அவர் இரவு நேரத்தில் வீட்டை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் ஆத்திரமடையும் மாலினி, செழியனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை செழியனுக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் குழந்தையை பார்க்க வந்ததாக வீட்டிற்கே நேரில் வருகிறார். அங்கு அவரை பார்க்கும் செழியன் அதிர்ச்சியடைகிறார். அவர்களின் உறவு குறித்து பாக்கியாவிற்கு மேலும் சந்தேகம் வலுக்கிறது.
பல விஷயங்களில் தன்னுடைய அப்பா கோபியை தொடர்ந்து பிரதிபலித்து வருகிறார் செழியன். கோபி போலவே மற்றொரு உறவால் செழியனும் ஜெனியை பிரியும் சூழல் ஏற்படுமோ என்று பாக்கியா தொடர்ந்து கலங்கி வருகிறார். இதற்கேற்றாற்போல ஜெனி பிரசவத்திற்காக அவரது அம்மா வீட்டிற்கு சென்றிருந்த சூழலில் செழியன், மாலினியுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால்,தற்போது தன்னுடைய குழந்தை பிறந்தவுடன் மாலினியுடன் உறவை முறித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்.


Click it and Unblock the Notifications











