BB 7: கற்றல் விதி இருக்கலாம்.. கற்றல் வதை இருக்கக்கூடாது.. தெளிவுப்படுத்திய உலகநாயகன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பான துவக்கவிழாவுடன் துவங்கியது.

நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பான வகையில் அறிமுகம் செய்து வைத்தார்.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டுமுதல் மாஸ் காட்டி வருகிறது பிக்பாஸ். பல்வேறு துறைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்களது சுக துக்கள், கோப தாபங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துக் கொண்டு, மொபைல் உள்ளிட்ட எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் கருத்துக்களை, பிரச்சினைகள் பகிர்வதை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்கள், மக்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த வெற்றியை பெற முடியும். அதனால் நிகழ்ச்சியை தங்களை சிறப்பாக வெளிப்படுத்த ஒவ்வொரு போட்டியாளர்களும் முனைவார்கள். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களம் கண்டுள்ளனர். இவர்களை சிறப்பான முன்னுரையுடன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது இந்த நிகழ்ச்சி 6வது நாளில் இன்றைய தினம் நுழைந்துள்ளது. தொடர்ந்து போட்டியாளர்கள் பிரதீப், கேப்டன் விஜய், விசித்ரா, ஜோவிகா என போட்டியாளர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையில் கல்வி தொடர்பான விவாதம் மிகவும் முற்றிக் காணப்பட்டது. படிப்பில் நாட்டமில்லாத ஜோவிகா 9வது வகுப்புடன் தான் பள்ளியிலிருந்து விலகிவிட்டதாக நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து அவர் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது முடிக்க வேண்டும் என்று விசித்ரா அறிவுறுத்தியிருந்தார். ஆனால் தனக்கு வராத விஷயத்தை யாரும் திணிக்க முடியாது என்று அவர் அதிரடியாக தெரிவித்திருந்தார். இவர்களுக்கிடையிலான இந்த விவாதம் நேற்றைய தினம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இருவருக்கும் ஆதரவாகவும் நெகட்டிவாகவும் ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன், இந்த விஷயம் குறித்து பேசி தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்த இரண்டாவது ப்ரமோவை தற்போது விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ஜோவிகா கல்வி முக்கியமில்லை என்று எப்போதும் கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கமல், விசித்ராவின் நோக்கம் தவறில்லை என்றும் கூறினார். தொடர்ந்து ஜெனரேஷன் இடைவெளியால் இந்த கருத்துமோதல் வந்ததையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டும், உயிரைக் கொடுத்து கல்வி முக்கியமில்லை என்று நினைப்பதை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், கற்றல் விதி இருக்கலாம், கற்றல் வதை இருக்கக்கூடாது என்றும் பேசினார். கமல்ஹாசனின் கல்வி குறித்த இந்தப் பேச்சு ஜோவிகா மற்றும் விசித்ராவிற்கு தெளிவை கொடுத்ததையும் இந்தப் ப்ரமோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











