Pandian stores: தனம் குறித்த உண்மை.. மயக்கமடைந்த மூர்த்தி.. இறுதிக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.
இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று, பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பரபரப்பான கட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

தனம் குறித்து தெரியவந்த மூர்த்தி அதிர்ச்சி: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து தன்னை நிலை நிறுத்தியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் அரவணைப்பையும் கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் கொடுத்து வருகிறது. பிரிந்திருந்த அண்ணன் -தம்பிகள் புதுமனை புகுவிழாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது ஒன்றிணைந்துள்ளனர். புதிய வீட்டில் தங்களது வாழ்க்கையை ஒன்றாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தனத்தின் மார்பக புற்றுநோய் குறித்து ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்த சூழலில், தன்னுடைய யூடியூப் சேனலில் அதை வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். தன்னுடைய வீட்டிலும் கேன்சரால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உள்ளதாக பொதுவாக ஐஸ்வர்யா தன்னுடைய வீடியோவில் கூற, இதை பார்க்கும் வீட்டு பெண்களின் பெற்றோர், அண்ணன் உள்ளிட்டவர்கள் தங்கள் வீட்டு பெண்ணிற்குதான் பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து பரிதவிக்கின்றனர்.

தொடர்ந்து மூர்த்தி உள்ளிட்டவர்களும் வீட்டிற்கு வந்து, இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரிக்கின்றனர். அவர் பொய்யாக வீடியோ போட்டதாக நினைத்து அனைவரும் ஐஸ்வர்யாவை திட்டித் தீர்க்கின்றனர். இதையெல்லாம் பொறுமையுடன் கேட்கும் ஐஸ்வர்யா, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தனத்திற்குதான் கேன்சர் என்பதை போட்டு உடைக்கிறார். இதையும் சமாளிக்க தனம் நினைக்கும் சூழலில், தன் தலைமீது சத்தியம் செய்யும்படி மூர்த்தி கேட்க, செய்வதறியாமல் திகைக்கும் தனம், உண்மையை கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.
இதைக் கேட்கும் மூர்த்தி திகைக்கிறார். இந்த உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை. மயக்கமடைந்து கீழே விழுகிறார். தொடர்ந்து அவரை எழுப்பி, படுக்க வைக்கின்றனர். சிறிது தெளிந்தபின்பு, அவர் தன்னுடைய ஆசை மனைவிக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்து, பரிதவிக்கிறார். தொடர்ந்து தனத்திடம் இதுகுறித்து மேலும் விசாரிக்கிறார். தன்னுடைய கணவனுக்கு இதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்ற காரணத்தால்தான் உண்மையை தான் மறைத்ததாக கூறுகிறார் தனம்.

உலகத்தில் யாருக்கும் கேன்சர் வரவில்லையா என்று கேள்வி எழுப்பும் தனம், அவர்கள் எல்லாம் மீண்டு, தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொண்டதை போல, தானும் இந்த வியாதியில் இருந்து மீண்டு வருவேன் என்று தன்னுடைய கணவனிடம் உறுதி கூறுகிறார். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டுள்ளதாகவும் அதை எல்லாம் செய்து முடிக்காமல் அவ்வளவு சீக்கிரத்தில் தான் இறக்க மாட்டேன் என்றும் தனம் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
தனம் குறித்த உண்மையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், விரைவில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாக தொடர்ந்து கூறப்படுகிறது. இதற்கேற்பவே அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. தனத்தின் நீண்டநாள் கனவான புதிய வீடும் கட்டப்பட்டு, அண்ணன் -தம்பிகள் அனைவரும் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில், விரைவில் துவங்கவுள்ள தொடரின் 2வது பாகத்தில், 5 ஆண்டுகள் கழித்து, தொடர் துவங்கவுள்ளதாகவும் அதற்கேற்ப காட்சி அமைப்புகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











